கிரீம் பன் மட்டுமா! காருக்கும் ஜிஎஸ்டி இப்படித்தான்.. டேட்டாவோடு நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ்
திருவனந்தபுரம்: இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர சொகுசு கார் பிஎம்டபிள்யூ இவி மாடல் காருக்கு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும், சாதாரண பெட்ரோல் காருக்கு 29 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் கேரள காங்கிரஸ் கட்சி மத்திய அரசை சாடியுள்ளது. ஜிஎஸ்டி விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாகியிருக்கும் நிலையில், கேரளா காங்கிரஸ், சூட்டோட்டு சூடாக இந்த பதிவை போட்டு விமர்சித்து இருக்கிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. சமீபத்தில் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் விதிப்பது குறித்து பேசியிருந்தார்.

அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் இந்த பேச்சு தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், காருக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. கேரள காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டு இருப்பதாவது:-
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு காரான பிஎம்டபிள்யூ i7 M70 காரின் விலை ரூ.2.38 கோடி. இந்த காருக்கு வெறும் 5 சதவிகித ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது. ரூ.11.9 லட்சம் மட்டுமே வரியாக விதிக்கப்படுகிறது. அதே வேளையில் வழக்கமான பெட்ரோல் காருக்கு ஜிஎஸ்டி + செஸ் வரி 29 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விதிக்கப்படுகிறது. இன்னோவா ஹைக்ராஸ் காரின் டாப் எண்ட் மாடலை எடுத்துக்கொண்டால், அதன் விலை ரூ.20.65 லட்சம் ஆக உள்ளது.
ஆனால் ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட இருமடங்கு ஆகிவிடும். அதாவது 39.55 லட்சமாக இருக்கிறது. வசதி படைத்த நாடுகளில் இவ்வளவு வரி முறை இல்லை" என்று கூறியுள்ளது. அதேபோல விலையுர்ந்த சொகுசு கார்களுக்கு வரி விதிப்பு குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தது. மேலும் இந்த பதிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் நிதின் கட்கரியையும் டேக் செய்துள்ள கேரள காங்கிரஸ், இதுதான் வரிக்கொள்கையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, கோவையில் கடந்த 11 ஆம் தேதி உள்ளூர் தொழில் முனைவோர்களுடன் நிர்மலா சீதாரமன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் கோவையை சேர்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில், கோவையில் பிரபலமாக உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசனும் பங்கேற்று பேசினார். அவர் ஜிஎஸ்டி குறித்து பேசினார்.
குறிப்பாக இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதற்குள் கிரீம் வைத்த பன்னுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பன்னையும், கிரீமையும் தனித்தனியாக எங்களிடம் கொடுங்கள். நாங்களே வைத்து கொள்கிறோம் என்கின்றனர். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி என்று இல்லாமல் எல்லா பொருளுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டியை கொண்டு வாருங்கள்.
ஒரு ஹோட்டலுக்கு ஒரு குடும்பத்தினர் வந்து உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பினால் அவர்களுக்கு பில் போடுவதற்கு அந்த கணினியே திணறுகிறது" என்று கூறினார். இவரது பேச்சால் அந்த அரங்கில் சிரிப்பலை எழுந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் புன்னகையுடனே கவனித்துக் கொண்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதையடுத்து, அன்னப்பூர்ணா உரிமையாளர், நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை சந்தித்து மன்னிப்பு கோரினார். இந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையானது. வீடியோ வெளியானதற்காக அண்ணாமலையும் மன்னிப்பு கோரினார். அடுத்தடுத்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனம் பெரிய விளக்கம் ஒன்றை அளித்து சர்ச்சைக்கு முற்ற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications