கேரளாவில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்தது பாஜக.. இ.கம்யூனிஸ்ட்டை விட சுமார் 3 மடங்கு அதிக ஓட்டு
திருவனந்தபுரம்: காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையான கேரளாவில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதோடு கேரளாவில் லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தென்இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகாவை தவிர தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக எம்பிக்கள் இல்லாத நிலை இருந்தது.

இந்த முறை கேரளா, தமிழகத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. மாறாக கேரளாவில் பாஜக கால்பதித்துள்ளது. அங்கு ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவை பொறுத்தவரை மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் தான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த முறை காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்தியன் முஸ்லிம் லீக் 2 இடங்களிலும்,வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, கேரளா காங்கிரஸ், ஆர்எஸ்பி கட்சி தலா ஒரு இடங்களில் வென்றுள்ளது.
பாஜகவை பொறுத்தமட்டில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 4,12,338 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 2 லட்சத்து 37 ஆயிரத்து 652 ஓட்டுகள் பெற்றார். இதனால் சுரேஷ் கோபி 74,686 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் கேரளாவில் தாமரை மலர்ந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளாவில் பாஜகவின் ஓட்டு சதவீதம் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கேரளாவில் 3 தொகுதிகளில் பாஜகவுக்கு 30 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் கிடைத்துள்ளன. அதன்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 37.8 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக திருவனந்தபுரம் தொகுதியில் 35.52 சதவிகித வாக்குகளைப் பெற்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் தோற்றார்.
அதேபோல் ஆட்டிங்கல் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளிதரன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் அவர் 31.64 சதவிகித ஓட்டுகளை பெற்றுள்ளார். அதோடு கடந்த முறையை ஒப்பிடும்போது 10க்கும் அதிக தொகுதிகளில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் ஆலப்புழாவில் பாஜக 28.3 சதவீதம், பத்தனம்திட்டாவில் 25.29 சதவீதம், பாலக்காட்டில் 24.31 சதவீதம், கோட்டயத்தில் 19.74 சதவீதம், காசர்கோட்டில் 19.73 சதவீதம், ஆலத்தூரில் 18.97 சதவீதம், கொல்லத்தில் 17.83 சதவீதம் என பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
மொத்தமாக பார்த்தால் கேரளாவில் பாஜக 16.68 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35.06 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ள நிலையில் அதற்கு அடுத்தப்படியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25.82 சதவீத ஓட்டுகளை பெற்றார். அதன்பிறகு பாஜக 16.68 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. மேலும் மற்றவர்கள் 7.81 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6.14 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
கேரளாவில் பாஜகவுக்கு வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் அந்த கட்சி வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் வென்று வரும் நிலையில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications