மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை சபரிமலையில் தங்க அனுமதிக்க கூடாது - கேரள ஹைகோர்ட் உத்தரவு
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்களை தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தை பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் தேதி முக்கிய நிகழ்வான மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
வழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தினசரியும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் பல நாட்கள் முன்பே சபரிமலை பகுதியில் பரண் அமைத்துத் தங்குவது வழக்கம். மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக உயரமான பகுதிகளில் பக்தர்கள் பரண் அமைப்பார்கள்.
இந்நிலையில் இவ்வருடம் இதேபோல மகர ஜோதி தினத்தன்று பக்தர்கள் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் தங்கவில்லை என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சபரிமலை மகர விளக்குப் பூஜை நாளை இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தில் உள்ளன. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பன் சிலைக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த திருவாபரணம் செவ்வாய்கிழமையன்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சென்றது. மகர விளக்குப் பூஜை நடைபெறும் 14ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த திருவாபரணம் சபரிமலை சமாதானத்தை அடையும். இதன் பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். திருவாபரண ஊர்வலத்தில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் தான் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். 20ஆம் தேதி காலை கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைக்காலம் நிறைவடைகிறது.