நெஞ்சே பதறுதே! 5 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கொடூரன் கைது.. அதிர்ந்த கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் 5-வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் தம்பதி வசித்து வந்தனர். இவர்களின் 5-வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென மாயமானாள். இதனால், பதறிப்போன பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இதில் சிறுமியை ஒருவன் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியை கடத்திக் கொண்டு திரிசூர் நோக்கி சென்ற பேருந்தில் ஒருவர் ஏறி சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேரமாக போலீசார் சல்லடை போட்டு பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அலுவா சந்தைக்கு பின்பக்கமாக பெரியாறு ஆற்றை ஒட்டி சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.

சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. பிறப்பு உறுப்புகளிலும் காயங்கள் இருந்தன. கேரளா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கடத்தியவன் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஸ்பாக் ஆலம் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்தது விசாரித்ததில் முதலில் சிறுமியை வேறு ஒரு கும்பலிடம் ஒப்படைத்ததாக கூறி விசாரணையை திசை திருப்ப முயன்றுள்ளான்.
போலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஆலம் ஒப்புக்கொண்டான். 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும் பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அலுவா துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5-வயது சிறுமி கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று அலுவா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதில், இந்த கொடூர செயலில் பின்னணியில் உள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உட்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்குக்கு அச்சம் நீங்கும். வெளி மாநில தொழிலாளர்களின் அடையாள விவரங்களை வாங்கி காவல் நிலையங்களில் வைத்து இருக்க வேண்டும் என்ற உள்துறையின் உத்தரவை போலீசார் பின்பற்றுகிறாரக்ளா? என்பதையும் பரிசோதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் 5-வயது சிறுமி கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications