பிரஸ் மீட்டில் விடாமல் கேட்ட நிருபர்கள்! எனக்கு தெரியாதுன்னா தெரியாதுதான்! கொந்தளித்த மோகன்லால்!
திருவனந்தபுரம்: எல்லா பிரச்சினைகளுக்கும் மலையாள நடிகர் சங்கமான "அம்மா" மீது குறை சொல்லவே கூடாது, அது போல் நானும் எந்த பவர் குரூப்பிலும் இல்லை என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கிட்டதட்ட 10 நாட்கள் கழித்து இந்த விவகாரம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஹயாத் ரெஜன்சி என்ற கிரிக்கெட் லீக் தொடங்கும் இடத்தில் இருந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மலையாள திரையுலகில் நான் 47 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடிவிடவில்லை, ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன்.

மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக யூனியன் இல்லை. இது ஒரு குடும்பம். ஒரு சங்கம் குறித்து அவதூறு பேசுவது துரதிருஷ்டவசமானது. மற்ற திரைப்பட துறைகளை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே உள்ளது. கடந்த வாரம் முழுக்க எனது மனைவியின் அறுவை சிகிச்சை மற்றும் படத்தின் புரமோஷன் பணிகளால் என்னால் ஹேமா கமிட்டி குறித்து எந்தவித விளக்கமும் அளிக்க முடியவில்லை.
நானும் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் எனக்கு தெரிந்த வரையில் ஹேமா கமிட்டிக்கு சிலவற்றை தெரிவித்துள்ளேன். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எல்லா வகைகளிலும் நான் அதற்கான முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன்.
நான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. இவ்வாறு மோகன் லால் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டியின் அறிக்கை முழுவதும் வெளியாகவில்லை என்றும் அதில் நடிகர்களின் பெயர்கள் இருப்பதால்தான் பகுதியாக வெளியானதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன்லால் எனக்கு தெரியாது என்றார். மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்ட போது எனக்கு தெரியாதுன்னா தெரியாதுதான் என்றார்.
இது போல் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சில இடங்ளில் வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது எதையும் சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.
மலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள், முன்வந்து புகார் அளித்து வருகிறார்கள்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் என்னவென்றால் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாஃபியாக்களின் பிடியில் சிக்கியிருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டுகிறார்கள். நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள்.
அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அதுபோல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் சம ஊதியம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications