முல்லைப் பெரியாறு அணையில் இருந்து... திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.. ஏன் தெரியுமா
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.90 அடியாக உயர்ந்ததுள்ள நிலையில், அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
குறிப்பாக இடுக்கியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

கேரளா கோரிக்கை
முல்லைப்பெரியாறு அணை நாட்டின் பழமையான அணைகளில் ஒன்று என்பதால் அணையின் நீர்மட்டத்தை 139க்கும் கீழாக வைத்திருக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இதற்கு அம்மாநில திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் ஆதரவு குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர் திறப்பு அதிகரிப்பு
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைத் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அந்த அணையின் நீர்மட்டம் 138.90 அடியாக உயர்ந்தது நிலையில், அணையில் இருந்து கூடுதல் நீரை வெளியேற்றும் வகையில் ஷட்டர்கள் மேலும் உயர்த்தப்பட்டன. மூன்று ஸ்பில்வே ஷட்டர்களும் தலா 70 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 1,675 கன அடி நீர் கீழணைக்குத் திறந்து விடப்படுகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின்
முன்னதாக, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், அணைக்கு வரும் நீர்வரத்து குறையாததால் அதிக அளவு நீரைத் திறந்துவிடுமாறு தமிழக அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். மேலும், இதனால் பெரியாறு ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு இதைவிட 4 மடங்கு அதிகமான நீரைத் திறந்துவிட்டாலும் பிரச்சினை எதுவும் வராது என்றும் உறுதி அளித்தார்.

முல்லைப் பெரியாறு அணை
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றில் 1895ஆம் ஆண்டு கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை கேரளாவில் அமைந்து இருந்தாலும் கூட அது தமிழ்நாடு அரசாலேயே இயக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி புதிய அணை கட்ட வேண்டும் எனக் கேரளா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போதுள்ள அணை கட்டமைப்பு வலுவாக உள்ளதாகக் கூறி தமிழகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications