கட்டுக்கடங்காத கொரோனா.. கேரளாவில் மளமளவென அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. மீண்டும் இரவு ஊரடங்கு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் இரவு ஊரடங்கை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக எந்தவொரு நாட்டிலும் கட்டுக்குள் வரவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிர ஊரடங்கு + சிறப்பான தடுப்பூசி பணிகள் ஆகியவை மூலம் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், ஒரு சில மாதங்கள் வரை கொரோனா கட்டுக்குள் இருக்கும் பகுதிகளிலும் கூட மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

கேரள மாநிலம்
இப்போது கேரளாவிலும் அதேதான் நடக்கிறது. இந்தியாவிலேயே முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் தான் பதிவானது. ஆனால், அம்மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வந்தது. அதேபோல 2ஆம் அலை சமயத்திலும் கூட, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், கேரளா அரசின் சிறப்பான திட்டமிடல் காரணமாக அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி வைரஸ் பாதிப்பும் கூட அங்குக் கட்டுக்குள்ளேயே இருந்து.

அதிகரிக்கும் கொரோனா
இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாகவே நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் கேரளாவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் பக்ரித் பண்டிகையின் போது அம்மாநில அரசு, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைத் தாண்டியும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தது. இதனால் அப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதேபோல இப்போது ஓணம் பண்டிகைக்குப் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஓணம் பண்டிகைக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைப் பார்க்க முடிந்தது.

30 ஆயிரம் பேருக்கு கொரோனா
அதன் பின்னரே மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமடைய தொடங்கியது. கடந்த 4 நாட்களாகக் கேரளாவில் தொடர்ச்சியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் அங்கு 31,265 பேருக்குப் புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 153 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

மீண்டும் இரவு ஊரடங்கு
இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கை அமல்படுத்தப்போவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் இது அமலுக்கு வரும் என்றும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தான் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடரும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த ஒன்று தான்
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த நிலைமையைச் சமாளிக்கத் தேவையான மருத்துவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேக்சின் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடிந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications