"சில தலைவர்கள் அல்ல, அவர் மட்டும் தான்" செய்தியாளர் சந்திப்பில் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி!
திருவனந்தபுரம்: கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஒரு தலைவர் மட்டும் தான் செய்தியாளர்களை சந்திக்காமல் செயல்பட்டு வருகிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம், கடந்த 11ம் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.
இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள். எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்றிரவு தேசம் பகுதியில் நிறைவு செய்தார்.
பாரத் ஜோடோ: ராகுல் காந்தியை வரவேற்க சாவர்க்கர் படம் வைக்கப்பட்டது ஏன்?
15வது நாள் நடைபயணம்
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியின் 15வது நாள் நடைபயணம் அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தேசிய கொடி ஏற்றிவிட்டு நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் மாற்று திறனாளிகள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் காந்தி பேட்டி
ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று காலை 10 மணிக்கு காருக்குட்டி கப்பிலா சந்திப்பில் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை இரவு 7 மணிக்கு சாலக்குடி பகுதியில் நிறைவடைகிறது. இதனிடையே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்
அப்போது ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களுக்கு எனது அறிவுரை. இது ஒரு நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பார்வையைப் பிரதிபலிக்கிறது. காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்று எடுக்கப்பட்ட முடிவு காங்கிரஸ் தலைவர் பதவியிலும் பின்பற்றப்படும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் நிறைவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த 15 நாட்களில் ராகுல் காந்தி இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். ஆனால் ஒரு சில தலைவர்கள் 20 ஆண்டுகளாக ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்தித்ததில்லை என்று பிரமர் மோடியை மறைமுகமாக கிண்டல் செய்தார்.
ராகுல் காந்தி மறைமுக விமர்சனம்
அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, சில தலைவர் அல்ல, ஒரே ஒரு தலைவர் தான் நிருபர்களை சந்திக்காமல் இருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே கிண்டல் செய்தார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.