"அன்போடு ராஜ மாணிக்கம்," "நானும் மதுரைக்காரன்.." விழாவில் ஃபன் செய்த அதிகாரிகள்
கேரளா அரசின் வருவாய்த் துறை செயலாளராக இருப்பவர் எம்.ஜி. ராஜமாணிக்கம் ஐஏஎஸ். நம் மதுரையைச் சேர்ந்த இவரை, அதிகாரிகள் மற்றும் கேரள மக்கள் மத்தியில் சுருக்கமாக 'எம்ஜிஆர்’ என்றழைப்பது வழக்கம். இந்நிலையில் ராஜமாணிக்கம் தன் வாழ்க்கை குறிப்பு குறித்து,’ அன்போடு ராஜமாணிக்கம்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நடிகர் மம்முட்டி கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்ட இந்த நிகழ்வில், ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
எப்போதும் பிஸியாகவும் அரசு நிகழ்ச்சிகளில் பார்மலாக பேசிச் செல்லும் அதிகாரிகள் இந்த மேடையில் அவர்களுக்கிடையே உள்ள உறவுமுறை குறித்து நக்கல் நையாண்டியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன், “நானும் மதுரைக்காரன். அந்தவகையில் ராஜமாணிக்கம் சாரை முன்பே தெரியும். நான் சிவில் சர்வீஸ் பணிக்குள் நுழையும்போதே, அவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார்.

2018 மழை வெள்ள காலத்தில் நான் வயநாடு சார் ஆட்சியராக இருந்தேன். சிறப்புப் பணியின் அடிப்படையில் ராஜமாணிக்கம் சார் அங்கு மீட்புப் பணிக்கு வந்திருந்தார். இரவு பகலாக தொடர்ந்து வேலை இருந்தது. ஒருநாள் இரவு கடுமையான பணிகளுக்கு பிறகு நாங்கள் முகாமில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் ஒரு டிரக்கில் நிவாரணப் பொருள்கள் வந்தன அதில் உள்ள பொருள்களை எடுத்து வைக்க ஆள்கள் இல்லை. சார், 'உடனடியாக வாங்க எல்லோரும்.. போய் பொருள்களை இறக்கலாம்’ என்று கூறினார். என் மனம் வேண்டாம் என்று சொன்னாலும், சீனியர் தூக்கும்போது சும்மா இருக்க முடியாது என சென்றேன்.
அந்த நேரத்தில் உதவியாளர் போட்டோ எடுத்தார். மூட்டை தூக்கிக் கொண்டே அதற்கு போஸ் கொடுத்தேன். அவ்வளவுதான் அதற்கு முன்பு நான் அங்கு பெரியளவுக்கு அறிமுகம் இல்லை. மறுநாள் இந்த செய்தி ஊடகங்களில் வந்து நான் சற்று பிரபலமாகிவிட்டேன் (சிரித்துக் கொண்டேன்). அவர் என் மூத்த சகோதரர், வழிகாட்டி. நான் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டவுடன், சாரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன். அப்போது. 'மாவட்ட ஆட்சியர் நல்ல உடை அணிய வேண்டும். உன்னிடம் உருப்படியான சட்டைகள் இருக்கின்றனவா?’ என கேட்டார். நான், 'இல்லை’ என்றவுடன் உடனடியாக அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்று 3 சட்டைகள் வாங்கி தந்தார்.
இதை நான் பல இடங்களில் சொல்லிவிட்டேன். முதல்முறை ஊடக நண்பரிடம் சொல்லியவுடன் பலர் எனக்கு சட்டைகளை பரிசாக வாங்கிக் கொடுத்தனர். தற்போது அதில் சிறிய கேப் விழுந்துள்ளது. அதனால் இதை இங்கு மீண்டும் பதிவு செய்கிறேன். அதிகாரிகள் எங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அவரிடம் தான் ஆலோசனை பெறுவோம். நாயகன் பட வேலுநாயக்கர் போல, எங்களின் பிரச்னைகளுக்கு அவர்தான் தீர்வு கொடுப்பார்.” என்று அரங்கம் மொத்தையும் சிரிக்க வைத்தார்.
கொச்சி காவல் ஆணையர் ஷியாம் சுந்தர், “ராஜமாணிக்கும் எதற்காக புத்தகம் எழுதினார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். கஷ்டப்பட்டு ஐபிஎஸ் முடித்துவிட்டு, நல்ல போஸ்டிங் கிடைத்தவுடன் மனம் சற்று நிம்மதியை தேடுகிறது. தற்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வது டிரெண்டாகியுள்ளது. அவர்களின் குடும்பங்களும் அதை விரும்புகின்றன. சிலர் புத்தகங்களும் எழுதுகின்றனர். நான் மட்டும் என் மனைவி முன்பு அந்த இரண்டையும் செய்யாதவனாக இருக்கிறேன்” என்று நகைச்சுவையாக பேசினார்.












Click it and Unblock the Notifications