பறவைக் காய்ச்சல் பீதி – கேரளாவில் 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு
திருவனந்தபுரம் : பறவை காய்ச்சல் பீதி காரணமாக கேரளாவில் உச்சபட்ச எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலப்புழாவில் 20 ஆயிரம் வாத்துக்களையும் கோட்டயத்தில் 35 ஆயிரம் வாத்துக்களையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த ஆண்டு பறவை காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் எடத்துவாபள்ளி தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன.
கடந்த வாரம் ஆழப்புழா மாவட்டத்தில் திடீரென வாத்துக்கள் மற்றும் பறவைகள் இறந்து விழுந்த நிலையில் அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து போபால் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். சுமார் 140 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 26 மாதிரிகளில் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பறவைக் காய்ச்சல் உறுதி
மேலும் ஆய்வில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹெச்15என்8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்ததையடுத்து. கோட்டயம் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வகை வைரஸ் பறவைகளை மட்டுமல்லாது மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக அவற்றை அழிக்க ஆலப்புலா மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

வாத்துகளை கொல்ல உத்தரவு
தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் ஆலப்புழாவில் 20 ஆயிரம் வாத்துக்களையும் கோட்டயத்தில் சுமார் 35 ஆயிரம் வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளிலிருந்தும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி முட்டைகளை விற்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும் இதே போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள மற்ற பகுதிகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி முட்டைகள் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது..

பறவைகளை கொல்ல சிறப்பு குழு
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வாத்துக்கள் மற்றும் கோழிகளை அழிப்பதற்கு கால்நடை துறை சார்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் வாத்துகளை அழித்து அவற்றை மிக ஆழத்தில் புதைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு நிவாரணம்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாத்துகளை அழித்தல் பணி தொடங்கும் என்றும், அரசு விதிகளின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சுராணி தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் , பொதுமக்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அச்சம் அடையத் தேவையில்லை எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications