62 பேரிடம் ரூ7.78 கோடி நிதி நிறுவன மோசடி- பத்மஶ்ரீ விருது பெற்ற கேரளா சுந்தர் சி மேனன் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 62 பேரிடம் ரூ7.78 கோடி மோசடி செய்ததாக 2016-ல் பத்மஶ்ரீ விருது பெற்ற தொழிலதிபர் சுந்தர் சி.மேனன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தக் கூடிய திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராகவும் இருந்த சுந்தர் சி மேனன் தற்போது நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் சுந்தர் சி மேனன். இவர் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தார். இவரது நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி பிளஸ் அசல் தரப்படும் எனவும் விளம்பரங்கள் செய்தார். இவரை நம்பி ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர்.

ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அதிக வட்டியுடன் அசலை திருப்பித்தராமல் சுந்தர் சி மேனன் ஏமாற்றி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்த பொதுமக்கள் திருச்சூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
மொத்தம் 62 பேர் திருச்சூர் போலீசில் சுந்தர் சி மேனனுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். ரூ7.78 கோடி பொதுமக்கள் பணத்தை சுந்தர் சி மேனன் மோசடி செய்ததாக திருச்சூர் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைகளின் முடிவில் திருச்சூர் போலீசார் சுந்தர் சி மேனனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தக் கூடிய திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராக இருந்தவர் சுந்தர் சி மேனன். 2016-ம் ஆண்டு தொழிலதிபர் என்ற முறையில் சுந்தர் சி மேனனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications