காதலியுடன் உல்லாசமாக இருக்க.. மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1.20 கோடி திருடிய கேரள மதபோதகர்!
திருவனந்தபுரம்: அமெரிக்காவில் பணியாற்றும் மனைவியின் ஊதியத்திலிருந்து ரூ 1.20 கோடியை எடுத்து காதலியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி ஜாலியாக இருந்த கேரளா மத போதகரை போலீஸார் கைது செய்தனர்.
கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே ஜோஸ் (52). மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்க வங்கியில் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கில் மனைவி தனது சம்பள பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.

ரூ 1.20 கோடி
அவ்வாறு டெபாசிட் செய்த பணத்திலிருந்து ரூ 1.20 கோடி மாயமானதை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து ஆலப்புழா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மனைவியின் கணக்கு
போலீஸார் ஜோஸின் மனைவியின் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது ரூ 1.20 கோடி ரூபாய் பிரியங்கா என்ற 30 வயது பெண்ணின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜோஸிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்களை அவர் அளித்தார்.

வெளிநாடு
மனைவி வெளிநாடு சென்ற பின்னர் ஜோஸும் பிரியங்காவும் நெருக்கமாகினர். இதனால் அவருடன் ஜாலியாக இருக்க அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரூ 1.20 கோடி பணத்தை பிரியங்காவுக்கு ஜோஸ் கொடுக்க நேரிட்டதால் கொடுத்தது உறுதியானது.

தப்பியோட்டம்
இதையடுத்து ஜோஸை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. பிரியங்காவை கைது செய்ய சென்ற போதும் அவர் இல்லை. இதனால் இருவரையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

நேபாளத்தில் பதுங்கல்
இதையடுத்து அவர்கள் இருவரும் நேபாளத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு ஆலப்புழா போலீஸார் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மத போதகர் தன் மனைவியின் சம்பளத்தில் இருந்து ரூ 1.20 கோடி ரூபாயை காதலிக்கு தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications