பெரியாரின் பிறந்த தினம்...பகுத்தறிவை நிலைநிறுத்த உறுதியேற்போம்...பினராயி விஜயன் டிவீட்
திருவனந்தபுரம்: தமிழ்நாடு முழுவதும் இன்று பெரியார் பிறந்த தினம், சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலைநிறுத்த உறுதியேற்போம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியதில் பெரியாரின் பங்கு அளப்பரியது. இதனையடுத்து அவரை தென்னிந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூகநீதி நாள்
தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

டிவீட்
இதன் தொடர்ச்சியாக தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியார் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான நமது போராட்டத்தின் உருவகம்தான் பெரியர். அவரது பிறந்த நாளான இன்று, பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலைநிறுத்தவும், அவரது பாரம்பரியத்தை போற்றவும் உறுதிமொழி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் பெரியார் பிறந்த தினத்தில் அவரது போராட்டங்களை நினைவு கூர்வது வழக்கம்.

போராட்டம்
1924ம் ஆண்டில் கேரள மாநிலத்தின் வைக்கம் எனும் இடத்தில் நடைபெற்ற ஆலைய நுழைவு போராட்டத்தில் பெரியாரின் பங்கு அளப்பரியது. இங்குள்ள சிவன் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராடிய அனைவரையும் திருவிதாங்கூர் அரசு கைது செய்தது. இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து பெரியார் இந்த போராட்டத்திற்கு சென்றிருந்தார்.

கைது போராட்டம் கைது
திருவிதாங்கூர் ராஜாவின் நண்பர் பெரியார். எனவே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதனை மறுத்து, தான் அரசனின் நண்பனாக இங்கு வரவில்லையென்றும், போராட வந்திருப்பதாகவும் கூறி போராட்டத்தை முன்னெடுத்து சென்றார். போராட்டத்திற்கு சென்ற அவரை அரசு கைது செய்தது. ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் விடுதலையானதும் தமிழ்நாடு திரும்பாமல் மீண்டும் போராட்டத்திற்கு சென்றால். இம்முறை 4 மாதம் சிறை தண்டனை.












Click it and Unblock the Notifications