பொங்கலுக்கு வயநாடு டூர் போற பிளான் இருக்கா.. உஷார்.. ஊருக்குள் புகுந்த புலியால் மக்கள் பீதி
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமம் அமைந்துள்ள பகுதியிலிருந்து காடு சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கும் நிலையில், புலி எப்படி கிராமத்திற்குள் வந்தது என்பது குறித்து வனத்துறையினர் குழப்பியுள்ளனர்.
வயநாடு பகுதி இயற்கையிலேயே புலிகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதிதான். ஆனால், வயநாட்டையொட்டியுள்ள தொண்டர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுசெரி பகுதியில் இதற்கு முன்னர் ஒரேயொரு யானை கூட காட்டை விட்டு கீழிறங்கி வந்ததில்லை. ஏன் இத்தனைக்கும் குரங்கு தொல்லை கூட இருக்காது. இந்நிலையில் நேற்று காலை தாமஸ் எனும் விவசாயி தன்னுடைய நிலத்திற்கு சென்றிருக்கிறார்.
இவர் நிலத்திற்கு போவதற்கு முன்னதாக சிலர் புலி போன்ற உருவத்தை வயல்வெளியில் பார்த்திருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்னர் இங்கு புலி இறங்கி வந்தது கிடையாது எனவே தாங்கள் பார்த்தது புலிதானா? என்று குழப்பத்தில் இருந்திருக்கின்றனர். இந்த பகுதியிலிருந்து குஞ்சோம் காடு 8 கிமீ தொலைவிலும், கண்ணூர் பேயா காடு 14 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. எனவே புலி வந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் ஆடு, புலி ஆட்டம்.. இறுதியாக வென்று அசத்திய காங்கிரஸ்.. ஆட்சியை பறிகொடுத்த பாஜக
புலி
ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் புலியின் உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. அதேபோல தாமஸின் அலறல் சத்தமும் கேட்டிருக்கிறது. இதனை கேட்டு அதிர்ந்து போன கிரம மக்கள் தாமஸின் குரல் கேட்ட திசை நோக்கி ஓடிச்சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு தாமஸ் குத்துயிரும் குலை உயிருமாய் கிடந்திருக்கிறார். உடனடியாக வனத்துறையனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாமஸை புலி தாக்கியுள்ளதால் அப்புலி இங்குதான் எங்காவது இருக்கும் என பயந்து அவரை மீட்க உடனடியாக யாரும் செல்லவில்லை. பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் வனத்துறையினர் வந்துள்ளனர்.
குழப்பம்
அவர்கள் தாமஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாமஸின் வயலுக்கும் காட்டுக்கும் இடையில் காப்பி தோட்டங்கள், மக்கள் வசிக்கும் சில குடியிருப்புகள் இருந்திருக்கிறது. ஆனால் இவையனைத்தையும் கடந்து, யார் கண்ணிலும் சிக்காமல் புலி எப்படி இங்கு வந்திருக்கும் என்று வனத்துறையினர் குழம்பிப்போயுள்ளனர். முதற்கட்ட விசாரணையிலும் இதற்கு முன்னர் இங்கு புலியை யாரும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் புலியின் காலடி தடத்தை மட்டும் சிலர் பார்த்திருக்கின்றனர். அதேபோல ஒரு காட்டெருமை ஊருக்குள் புகுந்துள்ளது. கிராமத்தில் இதற்கு முன்னர் நடந்த மிகவும் பரபரப்பான சம்பவங்கள் இவ்வளவுதான்.
போராட்டம்
ஆனால் திடீரென புலி தாக்குதல் நடத்தியிருப்பது கிராம மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலையடுத்து புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறியுள்ள போதிலும் மக்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். ஒரு வேளை இன்று புலியை பிடிக்க முடியவில்லையெனில் இரவு யாரை வேண்டுமானாலும் அது தாக்கலாம் என்றும் எனவே உடனடியாக மயக்க ஊசி செலுத்தி புலியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் இரண்டு வகை
பொதுவாக காட்டை விட்டு வெளியேறும் புலிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. புதியதாக பிறந்த புலி குட்டிகள் இரண்டு வயது வரை தாய் புலியுடன் இருக்கும். பின்னர் தானாக வேட்டையாடி தனக்கென ஒரு தனி பிராந்தியத்தை அமைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு அமைக்க தவறிய புலி குட்டிகள் காட்டின் விளிம்புக்கு வந்துவிடும். இவைகள் மனிதர்கள் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடும். இரண்டாவது ரகம் புலிகள் பெரிய புலியாக இருக்கும். இனச்சேர்க்கைக்காக இரண்டு வயது வந்த புலிகள் மோதும் போது தோற்றுப்போன புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்.
மூன்றாவது வகை
இந்த புலிகளால் சில நாட்களுக்கு வேட்டையாட முடியாது. எனவே இது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து கால்நடைகளை வேட்டியாடும். சில சமயங்களில் மனிதர்களையும் வேட்டையாடும். இதற்கு அடுத்த ரகம் மிகவும் ஆபத்தானது. இந்த வகை புலிகள் வயதானவையாக இருக்கும். தொடர்ந்து வேட்டையாட முடியாமல் உடல் தளர்ந்து போய் இருக்கும். இவைகள் மனிதர் வசிக்கும் பகுதிக்கு வந்து மனிதர்களை குறி வைத்து வேட்டையாடும். ஏனெனில் மனிதர்கள் புலிகளுக்கு எளிதான இலக்கு. எதிர்பாராத விதமாக ஒரு முறை வேட்டையாடிவிட்டால் அடுத்த முறையிலிருந்து மனிதர்களை இப்புலிகள் தொடர்ந்து குறி வைக்கும். மட்டுமல்லாது இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக இடம்பெயரும் என்பது குறிப்பிடத்தக்கது.