கண்ணீரில் மிதக்கும் வயநாடு..100க்கும் மேற்பட்டோருக்கு புது வீடுகள்.. காங்கிரஸ் ராகுல் காந்தி உறுதி.!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சி 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி தரும் என்று வாக்குறுதியளித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்
தற்போதுவரை 300க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று முன்தினம் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 316 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த துயரம் குறித்து இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலையை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
வயநாட்டில் ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்! மீட்பு பணிகள் குறித்தும் ஆய்வு
மட்டுமல்லாது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நேற்று வயநாடு சென்றிருந்தனர். அங்கு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சூரல்மலைக்கு சென்ற அவர்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “எனது தந்தை ராஜீவ் காந்தி இறந்தபோது உணர்ந்ததை இன்று உணர்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “
நான் நேற்று முதல் இங்கே இருக்கிறேன். இது ஒரு பயங்கரமான சோகம். இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர அனைத்து வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது. இதுபோன்ற ஒரு சோகத்தை கேரளா ஒரு பகுதியில் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications