நடந்ததால் கொப்பளித்த ராகுல் கால்கள்... இன்று பாதயாத்திரைக்கு ஓய்வு- நாளை முதல் மீண்டும் தொடக்கம்
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரைக்கு இன்று ஓய்வு. ராகுல் காந்தியின் கால்கள் கொப்பளித்துள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் அவர் ஓய்வெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 3,500 கி.மீ தொலைவுக்கு 150 நாட்கள் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் ராகுலின் யாத்திரையை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 3 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் தற்போது பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி செல்லும் வழியில் பொதுமக்கள், மாணவர்கள், அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து கலந்துரையாடி செல்கிறார். ராகுலின் இந்த பாதயாத்திரைக்கு கேரளாவில் மிகப் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் ராகுலின் கால்களில் கொப்பளங்கள் உருவாகி உள்ளன. இதனையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று ஒருநாள் ராகுல் காந்தி ஓய்வு எடுக்கிறார். இதனால் இன்று பாதயாத்திரை நடைபெறவில்லை. நாளை முதல் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வழக்கம் போல தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications