"பாஜக உடன் மோதல் உண்மை தான்.." ஒப்புக்கொண்ட ஆர்எஸ்எஸ்.. உடைத்து பேசிய முக்கிய தலைவர்! பரபரப்பு
திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ்- பாஜக இடையே மோதல் இருப்பதாகக் கடந்த பல மாதங்களாகவே செய்திகள் உலா வந்து கொண்டு இருந்தன. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருப்பது உண்மை தான் என்று ஆர்எஸ்எஸ் விளம்பர துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலை ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு இருந்தே ஆர்எஸ்எஸ்- பாஜக இடையே மோதல் இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனாலும், அதை இரு தரப்பும் மறுத்தே வந்தனர்.

இதற்கிடையே பாஜக உடன் மோதல் இருப்பது உண்மை தான் என்று ஆர்எஸ்எஸ் இப்போது தெரிவித்துள்ளது. அதேநேரம் இரு தரப்பிற்கும் இடையே உள்ளது குடும்பப் பிரச்சினை போல தான் என்றும் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளது.
சுனில்: கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் மூன்று நாள் அகில பாரதிய சமன்வாய் பைதக் நிகழ்ச்சி நடந்தது. இதன் கடைசி நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் விளம்பரத் துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது ஒரு நீண்ட பயணம். நீண்ட பயணத்தினது போது சில செயல்பாட்டுச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு தான். இந்த சிக்கல்களைச் சமாளிக்க எங்களிடம் ஒரு வழிமுறை உள்ளது. இதன் காரணமாகவே எங்களால் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற முடிகிறது.. 100 ஆண்டு கால வரலாற்றை நீங்கள் பார்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு அதுவே பதில் சொல்லும்" என்றார்.

நட்டா சொன்ன கருத்து: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்கு இப்போது தனி செல்வாக்கு இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் உதவி தேவையில்லை என்பது போலவும் பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் லோக்சபா தேர்தல் பணிகளில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. பல மாநிலங்களில் எப்போதும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருக்கும் நிலையில், இந்த முறை அது வெகுவாக குறைந்து இருந்ததாகக் கூறப்பட்டது.
பாஜகவின் வாக்குகள் குறைய இதுவும் ஒரு காரணம் என வல்லுநர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பாகவும் இந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சுனில் அம்பேகர் தெரிவித்தார். இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், "பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும். இது குடும்ப விவகாரம். மூன்று நாள் கூட்டத்தில் பல விஷயங்களை விவாதித்தோம். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டு இருக்கிறது" என்றார்.

மோதல் உண்மை தான்: ஆர்எஸ்எஸ்-பாஜக பிளவு பற்றிய கேள்விகள் கேட்கப்பட்ட போது சுனில் அம்பேத்கர் ஒருமுறை கூட அதை மறுக்கவில்லை. இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து பேசிய சுனில் அம்பேத்கர், "முக்கிய குறிக்கோள்களை அடைவதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் ஒரே பக்கத்தில் இருப்பது முக்கியமானது. ஆர்எஸ்எஸ் என்றால் தேசமே முதன்மையானது என அர்த்தம். ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் உறுப்பினரும் இந்த ராஷ்டிரமே சனாதனம் என்று நம்புகிறார்கள். அனைவரும் தேசத்திற்குச் சேவை செய்ய தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். இதுவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு. இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. செயல்பாடு ரீதியான பிரச்சினைகள் மட்டுமே எழுந்துள்ளது. அவை எல்லாம் கண்டறிந்து சரி செய்யப்படும்" என்றார்.
ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் நட்டா: பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடந்த இந்த கூட்டத்தின் முதல் இரண்டு நாட்கள் ஜேபி நட்டா இதில் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஜேபி நட்டா சந்தித்துப் பேசினார். ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று நட்டா கூறிய பிறகு அவர் அந்த அமைப்பின் தலைவர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். நட்டா உடனான சந்திப்பிற்கு பிறகே ஆர்எஸ்எஸ் அமைப்பு மோதல் இருப்பது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications