வேலையை காட்டிய பாஜக? வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல்! கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியிருந்தனர். இது தொடர்பான வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்த தெற்கு ரயில்வே, அந்த வீடியோவுக்கு தேச பக்தி பாடல் என பெயரிட்டிருந்தது.
இந்த வீடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜய் உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வீடியோ நீக்கப்பட்டிருக்கிறது.

"இது அரசியல் அமைப்புச் சட்ட விதிமீறல். சமூக வெறுப்பையும் பிரிவினைவாத அரசியலையும் அடிக்கடி உமிழும் ஆர்.எஸ்.எஸ். பாடலை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வில் சேர்ப்பது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகும். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைக்கூட சங் பரிவார் அமைப்பு தனது வகுப்புவாத அரசியலைப் பரப்புவதற்குப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. விடுதலைப் போராட்டத்தின்போது இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக செயல்பட்ட ரயில்வே, இன்று ஆர்.எஸ்.எஸ்-இன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது" என்று பிரனராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது நிகழ்வை அரசியல்மயமாக்குவதாகவும், குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பாடலைச் சேர்த்தது, ஒரு தேசிய நிகழ்வை ஆர்.எஸ்.எஸ். நிதியுதவி பெறும் ஒரு நிகழ்வாகக் தரம் தாழ்த்தப்பட்டிருக்கிறது என்று வேணுகோபால் விமர்சித்திருக்கிறார்.
இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications