ஓணம் கோலத்தில்.. ஆபரேஷன் சிந்தூர் என எழுதி RSS கொடியை வரைந்த பாஜகவினர்! சலசலப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால், ஓணம் கோலத்தில் ஆர்எஸ்எஸ் கொடி வரையப்பட்டு அத்துடன் ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்டிருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி, கோயில் ஒன்றில் 'ஆபரேஷன் சிந்துார்' பெருமையை பறைசாற்றும் வகையில் பூக்கோலம் அமைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோலத்தை அமைத்ததாக ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகத்தினர், இந்த பூக்கோலம் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம்சாட்டினர். ஆனால், பாஜகவோ, மே மாதம் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையைப் போற்றும் வகையில் இது அமைக்கப்பட்டதாகக் கூறியது.
என்ன நடந்தது?
கொல்லம் மாவட்டத்தில் உள்ள முத்துப்பிலக்காடு பார்த்தசாரதி கோயிலில் இந்தச் சம்பவம் நடந்தது. கோயில் வாசலில் போட்டப்பட்ட இந்தக் கோலத்தில் ஆர்எஸ்எஸ் கொடியின் சின்னமும், 'ஆபரேஷன் சிந்துார்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்ததாக கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது. இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதி என கோயில் கமிட்டி உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
ஆபரேஷன் சிந்தூர் என எழுதுவதற்கு யாருக்கும் எந்த தடையும் கிடையாது. ஆனால் ஆர்எஸ்எஸ்-க்கும் ஆபரேஷன் சிந்தூருக்கும் என்ன தொடர்பு? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. மட்டுமல்லாது கோயில் வாசல்களில் இடப்படும் கோலங்களில் கொடிகள் சின்னம் இடம்பெறக்கூடாது என ஏற்கெனவே கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் ஓணம் கோலம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
உள்நோக்கம் கொண்ட கோலம்
அதாவது, "மோதல்களைத் தவிர்க்கும் பொருட்டு, கோயில் வளாகத்திற்குள் கொடிகள் போன்ற அலங்காரப் பொருட்களை வைக்க 2023-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையையும் மீறி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தங்கள் கொடி சின்னத்துடன் 'ஆபரேஷன் சிந்துார்' வாசகத்தை மலர்களால் எழுதியுள்ளனர். இது உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதோடு, கலவரத்தைத் தூண்டும் விதமாக இருந்ததால் புகார் அளித்தோம். ஆபரேஷன் சிந்தூர் மீது எங்களுக்கு முழு மரியாதை உண்டு. ஆனால், இந்த கோலம் உள்நோக்கத்தோடு இருக்கிறது" என்று கோயில் கமிட்டி அலுவலர் அசோகன் கூறியிருக்கிறார்.
பாஜக அதிருப்தி
இந்த புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்குப்பதிவு அதிர்ச்சியளிப்பதாக பாஜக கூறியிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கேரளாவில் பாகிஸ்தான் ஆட்சி நடக்கிறதா என்று 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பினார். எஃப்.ஐ.ஆர். உடனடியாக திரும்பப் பெறப்படாவிட்டால், பாஜக நீதிமன்றத்தை நாடும் என்றும் கூறியுள்ளார்.
"இது கேரளா. இது இந்தியாவின் பெருமைமிக்க ஒரு பகுதி. இருப்பினும், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற வார்த்தைகளுடன் பூக்கோலம் அமைத்ததற்காக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது!" என்று சந்திரசேகர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாசாங்குதனம்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை, "ஒரு பிரிவினரை திருப்திப்படுத்த" எடுக்கப்பட்டது என்று பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டினார். "கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற வார்த்தைகள் இருந்த காரணத்தினால் ஓணம் பூக்கோலத்தை காவல்துறை அகற்றச் செய்துள்ளது. இது பாகிஸ்தான் அல்ல. இடதுசாரி ஆட்சியின் கீழ் உள்ள கேரளா இது. இங்கு தேசபக்தி செய்திகளைக் கொண்ட பூக்களும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் செயலாகும். இது உச்சக்கட்ட பாசாங்குத்தனம்!" என்று மால்வியா 'எக்ஸ்' தளத்தில் விமர்சித்திருக்கிறார்.
உண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஆபரேஷன் சிந்தூர் என எழுதியதற்கு கிடையாது, கோயில் கோலத்தில் RSS கொடியை வரைந்ததற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications