41 நாள் வழிபாட்டுக்கு பலன்.. தங்க அங்கியில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை! சரண கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை
டிதிருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை இன்று 10.10 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க அங்கி அணிந்து அருள் பாலித்த சபரிமலை ஐயப்பனை மனமுருக பிரார்த்தித்தனர். காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை தங்க அங்கி அணிந்த ஐயப்பனுக்கு மண்டல சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், இன்று இரவு 11 மணிக்கு நடை மீண்டும் சாத்தப்படும். இதன் மூலம் மண்டல கால வழிபாடுகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகின்றன. பின்னர் மகர விளக்கு வழிபாடுகளுக்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும். இந்த முறை மண்டல பூஜை இன்று நடைபெற உள்ளது. இதற்காக ஐயப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சபரிமலை கோவிலின் மண்டல வழிபாடு கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டதுடன் தொடங்கியது. மொத்தம் 41 நாட்கள் நடைபெற்ற இந்த மண்டல கால வழிபாட்டின் நிறைவு நிகழ்வாகவே இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
மண்டல பூஜைக்காக பயன்படுத்தப்படும் தங்க அங்கி, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கியின் எடை சுமார் 420 பவுன். இது பல ஆண்டுகளாக மண்டல பூஜை நாளில் மட்டுமே சாமிக்கு அணிவிக்கப்படுகிறது. இவ்வாண்டும் மண்டல பூஜைக்காக டிசம்பர் 23ஆம் தேதி ஆரன்முளா கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தங்க அங்கி பம்பை வழியாக சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை ஏந்தி கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
தங்க அங்கி
சன்னிதானத்தில் தங்க அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரும், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரியும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 18 மடிப்படிகள் வழியாக தங்க அங்கி கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. மாலை நேரத்தில் ஐயப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இரவு முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் இரவு 11 மணியளவில் கோவில் நடை மூடப்பட்டது.
மண்டல பூஜை
இன்று மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. காலை நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை தங்க அங்கி அணிந்த ஐயப்பனுக்கு மண்டல சிறப்பு பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை முடிந்த பின் இரவு 11 மணிக்கு நடை மீண்டும் மூடப்படும். இதன் மூலம் மண்டல கால வழிபாடுகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகின்றன. மண்டல பூஜைக்கு பின் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சன்னிதானம் சுத்தம் செய்யப்படும்.
மகர விளக்கு
அதன் பின்னர் மகர விழா வழிபாடுகளுக்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மண்டல சீசனின் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெற்ற நிலையில், சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் கூடினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் கூடுதல் போலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications