சபரிமலை போராட்டத்தில் கலவரம்.. கல் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி.. போலீஸ் குவிப்பு!
நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார்.
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடக்கிறது.
22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இன்று போராடி வருகிறார்கள். நேற்று மாலையே இதற்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டது.
நேற்று போராட்டம்
நேற்று பாஜக சார்பாக கேரளா தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடந்தது. பாஜக மகளிரணி சார்பாக இந்த பெரிய போராட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த போராட்டம் நடந்தது.
இன்று போராட்டம்
சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி கல் வீசி தாக்கிக் கொண்டனர்.
சிகிச்சை பலி
இந்த கலவரத்தில் காயமடைந்த சந்திரன் உன்னிதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 55 வயது நிரம்பிய இவருக்கு தலையில் பெரிய காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். சந்திரன் உன்னிதன் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர்.
பெரிய குற்றச்சாட்டு
இந்த கலவரத்திற்கு காரணம் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் சந்திரனை கொன்றதாக பாஜக கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.