சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. கனமழை, கடும் பனியால் புல்மேடு, பெரியபாதை வனப் பாதை மூடல்
திருவனந்தபுரம்: பெஞ்சல் புயல் காரணமாக சபரிமலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கன மழை மற்றும் கடும் பனியின் தாக்கம் காரணமாக சபரிமலைக்கு எளிதில் செல்லக்கூடிய வழியான புல்மேடு மற்றும் பெரிய பாதை வனப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டைவிட பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பாரம்பரிய பாதையாகும்.

எரிமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம். இந்த இரண்டு பாதையைத் தவிர சபரிமலைக்குச் செல்ல மேலும் இரண்டு பாதைகள் உள்ளன. இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் அருகே சத்திரம், புல்மேடு ஆகிய இரண்டு பாதைகள் உள்ளன. இவை மிகவும் எளிதான பாதையாகும்.
பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சபரிமலையில் கடும் மழை பெய்யும் என்றும், 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சனக்கிழமை மாலையில் இருந்து சபரிமலை, நிலக்கல், பம்மபையில் கன மழை பெய்து வருகிறது.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் மழையைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சிலர் ஐயப்பனை காண சென்று வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பலத்த மழை மற்றும் பனியின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது.
மழை மற்றும் பனியின் தாக்கம் காரணமாக வண்டிப்பெரியாறு அருகே உள்ள சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்துக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெரிய பாதை எனும் எரிமேலியில் இருந்து முக்குழி வழியாக பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எரிமேலியில் இருந்து பம்பை வரை வாகனத்தில் இருந்து, அங்கிருந்து நீலிமலை சரங்கொத்தி, மரக்கூட்டம் வழியாகச் செல்கின்றனர்.
இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: பெஞ்சல் புயல் காரணமாக தற்போது இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சத்திரம், புல்மேடு வழியாக சந்நிதானத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை தலைவர், பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கல் ஆற்றில் குளிக்கவும், ஆற்ரைக் கடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இயல்பு நிலை திரும்பும் வரை நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை மற்றும் கடும் பனி காாரணமாக சபரிமலைக்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது












Click it and Unblock the Notifications