"உயிருக்கு ஆபத்து" மஞ்சு வாரியர் புகாரின் பேரில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது
திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில் தன்னை மிரட்டுவதாக மஞ்சுவாரியர் புகார் கூறிய நிலையில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வாரகாலமாக மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என்றும் அவரை 4 நாட்களாக காணவில்லை என்றும் தனது புகாருக்கு மஞ்சு வாரியரோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ விளக்கம் அளிக்கவில்லை என பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் மஞ்சுவாரியர் கந்து வட்டி கும்பலின் பிடியில் சிக்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் சசிதரன் தெரிவித்திருந்தார். மஞ்சு வாரியரை காணவில்லை என அவரது மேனேஜருக்கு டேக் செய்து பதிவு போட்டிருந்த போதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.
பிளாஷ்பேக்.. உயிருக்கு ஆபத்து என அன்றே புகார் அளித்த நடிகை மஞ்சு வாரியர்.. நடந்தது என்ன?
மஞ்சு வாரியர் எங்கே?
மேலும் மஞ்சு வாரியர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. காரணம் எனக்கு சட்டம் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்த சசிதரன் கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
அதில் அவர் திருநங்கை ஷாலு மரணம் முதல் மஞ்சு வாரியர் வழக்கு வரை பல்வேறு சம்பவங்களில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியிருந்தார். மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப், விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக மஞ்சு வாரியர் சாட்சியம் அளித்ததால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சசிதரன் குறிப்பிட்டிருந்தார்.
தாக்கம்
சமூகவலைதலங்களில் தான் போடும் போஸ்ட்களுக்கு மஞ்சு வாரியர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காததால் சந்தேகம் வலுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் மஞ்சு வாரியர், சசிதரன் மீது கொச்சியில் உள்ள எலாம்கரா காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார்.
இயக்குநர் கைது
அதில் சமூகவலைதளங்களில் எனது பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையிலும் என்னை மிரட்டும் வகையிலும் பதிவுகளை சசிதரன் போடுகிறார் என மஞ்சு வாரியர் தனது புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து சசிதரனை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீகுமாரால் எனது உயிருக்கு ஆபத்து என மஞ்சு வாரியர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.