உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சபரிமலைக்குள் ஒரு பெண்ணை கூட செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் ரகளை!
Recommended Video
நிலக்கல்: சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் கூட கோயிலை நெருங்க போராட்டக்காரர்கள் அனுமதிக்காததால் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு நுழையலாம் என்ற உச்சநீதிமன்றம் பொய்த்து போனதாகவே கருதப்படுகிறது.
சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டு வருகிறது. இது காலங்காலமாக தொன்று வந்த வழக்கம்.
இந்நிலையில் வழிபாட்டு முறையில் ஆண், பெண் பாகுபாடு கூடாது என்று உச்சநீதிமன்றத்தை சிலர் அணுகியதால் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வழங்கியது.
பெண்கள்
இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்தது. இந்நிலையில் நேற்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது பெண்கள் பெருமளவில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தடுப்பு
இதனால் கேரளத்தில் பெரும்பாலான அமைப்பினர் சபரிமலையை காப்போம் என்ற விஷயத்தை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கல்லில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதை தடுத்தனர்.
பம்பை வரை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் மாதவி தனது குடும்பத்தினருடன் நேற்று நிலக்கல்லுக்கு வந்திருந்தனர். அங்கிருந்த செக் போஸ்ட்களில் பெண்களுக்கு எதிரான அமைப்பினரிடம் இருந்து எப்படியோ போலீஸ் பாதுகாப்புடன் பம்பை வரை முன்னோக்கி சென்றார்.
மாதவி
இந்நிலையில் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சன்னிதானத்துக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதாகவும் பயணத்தை தொடரலாம் என்று மாதவியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினருடன் மலைப்பாதைக்கு நடந்து சென்ற போது அங்கு ஐயப்ப தர்ம சேனா அமைப்பினர் இவர்களை முற்றுகையிட்டு மிரட்டல் விடுத்தனர்.
சாதனை படைத்திருப்பார்
இதையடுத்து முன்னேறி செல்ல முடியாமல் மாதவி குடும்பத்தினர் தவித்தனர். போலீஸார் பாதுகாப்பு அளித்தும் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியவில்லை. வேறு வழியின்றி சன்னிதானத்துக்கு செல்வதை மாதவி கைவிட்டார். ஒரு வேலை அவர் கோயிலுக்கு சென்றிருந்தால் ஐயப்பனை வழிபட்ட 50 வயதுக்குள்பட்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்திருப்பார். பெண்கள் சபரிமலைக்குள் நுழையலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் நுழைய முடியவில்லை என்பது வருந்தக்க விஷயம் என்று கருதப்படுகிறது.