இந்தியாவின் எதிர்பார்ப்பு மையம் ஸ்டாலின் - புகழ்ந்து தள்ளிய கேரள முதல்வர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: இந்தியாவின் எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருவதாக கண்ணூர் மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இதில், பேசிய கேரள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

இந்தித் திணிப்பு எதிராக பினராயி
"ஒரே நாடு, ஒரே மொழி, புதிய கல்விக் கொள்கையில் இந்தி என மத்திய பாஜக அரசு கூறியபோது தேசிய அளவில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சிதான் இன்று மாநில மொழிகளை சிதைக்கும் முயற்சி. தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சியே இந்தி திணிப்பு.

அதிபர் ஆட்சியை கொண்டு வர முயற்சி
இந்தி மொழி திணிக்கப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சங்க்பரிவார சக்திகளுக்கு நாடாளுமன்ற நடைமுறையின்மீது நம்பிக்கையே இல்லை. எனவேதான் இந்தியாவை அதிபர் ஆட்சிக்கு மாற்ற முயற்சி செய்கிறார்கள். தங்கள் திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தியும் வருகிறார்கள்.

வரியை தர மறுக்கிறார்கள்
ஜி.எஸ்.டி. வரியை தராவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என அனைத்து மாநில அரசாங்கங்களும் எச்சரித்த பிறகே ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்தது. மாநில அரசுகளுக்கு தொடர்பே இல்லாத செஸ் மற்றும் சர்சார்ஜ் வரியை 15% ஆக உயர்த்தி இருக்கிறார்கள். ஆனால், அந்த முழு வரியும் மத்திய அரசுக்கே செல்கிறது.

எதிர்பார்ப்பின் மையம் ஸ்டாலின்
மத்திய பாஜக அரசு கூட்டாட்சியை அழிக்கும் அத்தனை முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தை பலப்படுத்தவும், கூட்டாட்சியை நிலைநாட்டவும் வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருக்கும் இந்த மாநாடு அதற்கான அடித்தளமாக அமைந்து இருக்கிறது. இந்திய நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்." என்றார்.

பினராயி விஜயனை புகழ்ந்த ஸ்டாலின்
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்தவுடன் நான் வருவதற்கு ஒப்புக்கொண்டேன். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நான் இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்கு பினராயி விஜயன் உடனான நட்பும் காரணம். மாநில உரிமைகளை காப்பதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிங்கம் போல் செயல்பட்டு வருகிறார். கேரளாவில் பினராயி விஜயனின் ஆட்சி சிறந்த ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மத்திய பாஜக அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பான ஆட்சியை அவர் வழங்கி வருகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications