என்ட பேரு ஸ்டாலின்.. டெல்லிக்கு பவர்புல் மெசேஜ் அனுப்பிய முதல்வர்.. அவருக்கும் செக்! கவனிச்சீங்களா?
திருவனந்தபுரம்: நேற்று கேரளாவில் சிபிஎம் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். நேரடியாக மத்திய அரசை தாக்கி கடுமையான சில கருத்துக்களை அவர் பகிர்ந்தார்.
நாடு முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று அந்த விழாவில் கலந்துகொண்டு நீண்ட நேரம் உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை புகழந்து பேசினார்.

ஸ்டாலின் ஹைலைட்ஸ்
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நேராக மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். மத்திய பாஜக அதிகாரங்களை குவிப்பதாக ஸ்டாலின் புகார் வைத்துள்ளார். அதில், டெல்லியில் உள்ள மத்திய பாஜக அரசு மாநிலங்களை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. டெல்லியில் உள்ளவர்கள் மாநிலங்களை அடிபணிய செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. நானோ, பினராயி விஜயனோ தலையாட்டி பொம்மைகளாக இருந்தால், நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள். மாநில முதல்வர்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஒரே நாடு
ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே மதம்.. ஒரே உணவு என்ற மாற்ற முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதை நாம் தடுக்க வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேண்டும்.. போராட தயாராக இருக்க வேண்டும். மாநிலங்கள் போராடி.. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால் மட்டுமே இந்தியா என்ற நாடு காப்பாற்றப்படும். என்று குறிப்பிட்டார்.

மாநிலங்கள் அதிகாரங்கள்
மேலும் தனது உரையில் ஆளுநர்களுக்கும் குட்டு வைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தேசிய அளவில் நாம் ஈட்டும் வெற்றி மூலம் நம் நாட்டின் ஜனநாயகம், மதசார்பின்மை, இறையாண்மை பாதுகாக்கப்படும். இந்திய முதலமைச்சர்களிலேயே சிங்கம் பினராயி விஜயன்.நாட்டின் இறையாண்மையை காப்பதற்கு அவர் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார், என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின், 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மறுத்து வருகிறார் ஆளுநர் ஆர். என் ரவி. தனது ஜனநாயக கடமையை செய்யாமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக அவர் செயல்படுகிறார். மொத்தம் 11 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நிறைவேற்றும் மசோதாவை நிறுத்தி வைக்க அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை கூட மீறி ஒன்றிய அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.

என்ட பேரு ஸ்டாலின்
பல்வேறு ஆளுநர்களுக்கு செக் வைக்கும் வகையில்.. அவரின் இந்த பேச்சு அமைந்தது. இது போக என்ட பேரு ஸ்டாலின் என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சில நிமிடம் மலையாளத்தில் பேசினார். இதை கேரள ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறிய நிலையில்.. முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பேசியது டெல்லிக்கு அனுப்பப்பட்ட வலுவான மெசேஜ் என்று மலையாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாநில முதல்வர்கள் கூட்டமைப்பு
மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், மாநில முதல்வர்களின் கூட்டமைப்பு பற்றியும் பேசினார். இதற்காகவே தென் மாநில முதல்வர்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாநிலங்களை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று பாஜக முயல்கிறது. நாடாளுமன்றத்தில் கூட விவரங்கள் இன்றி சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். மாநிலங்களை எப்படியாவது கட்டுப்படுத்தலாம் என்பது தொடங்கி.. கிராமங்களில் இருக்கும் கூட்டுறவுகளையும் கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications