எந்த ஒரு ஆசிரியருக்கும்.. இப்படி ஒரு துயரம் நேரக் கூடாது! வயநாட்டையே உலுக்கிய சம்பவம்! என்ன நடந்தது
திருவனந்தபுரம்: வயநாட்டில் மீட்பு பணிகளுக்கு இடையே நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 290 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நம்மிடம் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, முண்டக்காய் டவுன் முழுக்க முழுக்க களிமண்ணில் கட்டப்பட்ட கிராமம். இது சரிந்து அப்படியே சூரல் மாலா கிராமத்தில் விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமமும் சரிந்து உள்ளது. இதில் இருந்து சென்ற மண்.. அப்படியே தண்ணீரில் கலந்து அங்கே இருக்கும் ஏறுவலாஞ்சி ஆற்றின் போக்கையே மாற்றி உள்ளது. அதாவது அந்த ஆறு தடை பட்டு அருகே உள்ள ஊர்களை உடைத்துக்கொண்டு புதிய திசையில் தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. அங்கே நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் நம்மிடம் இது தொடர்பாக பேசி உள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்: வயநாட்டில் மீட்பு பணிகளுக்கு இடையே நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே இதுவரை 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
பெற்றோர்களை ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஊர் ஆட்கள் மூலம் அடையாளம் காண முடிகிறது. ஆனால் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. இதற்காக அவர்கள் படிக்கும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை வைத்தே மீட்பு பணிகளில் குழந்தைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். பொதுவாக ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை குழந்தைகளாக பார்ப்பர். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் தங்களின் மாணவ , மாணவியர்களை அடையாளம் காண வேண்டிய மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications