இரவு 1:30க்கு நடந்த நிலச்சரிவு! ஒரு நொடியில் தப்பித்த குடும்பம்! நேரில் பார்த்தவர் பகீர் பேட்டி
கேரளா: நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகத் தமிழக இளைஞர் ஒருவர் வயநாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து இதுவரை ஊடகங்களில் வெளிவராத பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 189 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் ஓரங்களில், மலைச்சரிவுகளில் என திரும்பிய பக்கம் எல்லாம் மனித சடலங்கள் புதைந்து கிடக்கும் படங்கள் வெளியாகி பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர்.

இந்தச் சம்பவம் உலகம் முழுக்க உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் கிளைமேட் சேஞ்ச் பாதிப்பு எந்த வகையில் எல்லாம் அழிவை ஏற்படுத்தும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 37 ஆயிரம் கிமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட தமிழக இளைஞர் ஒருவர் வயநாடு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தைரியமாக ஊட்டி வழியாகப் பயணம் செய்து சென்றுள்ளார். அங்கே இருந்து ஒரு யூடியூப் சேனலுக்கு கள நிலவரம் பற்றி லைவ் ஆகப் பேசி இருக்கிறார்.
அந்த இளைஞர் வயநாட்டில் கொட்டும் மழைக்கு மத்தியில் நின்று காணொளி மூலம் அளித்துள்ள பேட்டியில், "மக்கள் இதை இயற்கையாக நடந்த பேரிடர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது இயற்கை பேரிடர் கிடையாது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்தான் இது என நான் சொல்கிறேன். பலர் வயநாடு இந்த விபத்தில் சிக்கி 40 பேர் இறந்திருக்கிறார்கள். சுமார் 18 பேரின் உடல்கள் கிடைத்துள்ளது என்று செய்தியைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் வயநாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் நான் பேசிய போதுதான் நாம் நினைப்பதைவிட மிகப்பெரிய அளவில் இந்தப் பேரிடர் நடந்துள்ளது என்பதே புரியவந்தது. ஊடகங்களில் வரும் செய்தி கொஞ்சம் தான். அதைத்தாண்டி பல இழப்புகள் அங்கே ஏற்பட்டுள்ளது.
எனக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. அதற்காக நான் கன்னூர் போகவேண்டி இருந்தது. அங்கேதான் என் மனைவி இருக்கிறார். அவரை இன்னும் நான் போய் பார்க்கவே இல்லை. அதற்குள் இந்த வயநாடு செய்தியைக் கேள்விப்பட்ட உடன், குழந்தையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் வயநாடு போய் அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன்.
எனவே நேற்றே நான் கிளம்பிவந்துவிட்டேன். முதலில் போவதற்கு வழி இருக்காது என்றே நினைத்தேன். ஊட்டி வழியாக வருவதற்காகப் பாதை நன்றாகத்தான் உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வயநாட்டில் நடக்கவில்லை. நிலச்சரிவுக்கும் வயநாட்டுக்கும் பல கிமீட்டர் இருக்கும். இப்போது மேப்படி கிராமத்தில் இருக்கிறேன். இது ஒரு சின்ன கிராமம்.
இங்கிருந்து 13 கிமீட்டர் தொலைவில் சூரல் மலை என்று ஊர் இருக்கிறது. இங்குதான் நிலச்சரிவே நடந்துள்ளது. அதன் பக்கத்தில் உள்ள கொற்கை என்ற இடமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 3 கிராமங்களைக் காணவே இல்லை. அதுவும் கிராமம் என்ற ஒன்று இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழிந்துவிட்டது.
பலரது கதறல் குரலைக் கேட்கவே முடியவில்லை. அந்தளவுக்கு மக்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரிடம் நான் பேசினேன். அவர் தமிழ்நாட்டிலிருந்து பல ஆண்டுகள் முன்பே இங்கே வந்தவர்கள். அவரது மகன் ஆடி 18 பண்டிகைக்காக இங்கே வந்துள்ளார்.
இரவு 12 மணிக்கு அவரது வீட்டுக்குப் பின்னால் கல், மண் எல்லாம் சரிந்து வந்துள்ளது. அதை உணர்ந்த அவர் உடனடியாக தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வீட்டை விட உயரமான இடத்திற்குப் போய் இருக்கிறார். சரியாக இரவு 1.30 மணிக்கு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அவரது வீடே மூடிவிட்டது. இந்த விபத்தில் இவரது உறவினர் 6 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
அரசாங்கம் பலி எண்ணிக்கை 300 எனச் சொல்லி உள்ளது. கட்டாயம் இங்கே நேரில் வந்து கள நிலவரத்தைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை கட்டாயம் 800க்கு மேல் தான் இருக்கும் என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் இதுவரை நடந்துள்ள நிலச்சரிவு இதுதான். நான் இங்கே வந்த பிறகு 22பேர் கொண்ட ஒரு குழு இருந்தது. அவர்களுடன் நான் இணைந்து வேலை செய்து வருகிறேன். மீட்புப் பணி என்பது எளிதாக இல்லை. மழை தொடர்ந்து பெய்துகொண்டே உள்ளது. ஆகவே சவாலான காரியமாக உள்ளது. அரசாங்கம் மிகக் கடுமையாக மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.
இந்தப் பேரிடருக்கு இந்த மலை வாழ் மக்கள் காரணம் இல்லை. நகரத்தில் உள்ள மக்களின் சொகுசு வாழ்க்கைதான் காரணம். கரியமில வாய்வு வெளியேற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரங்களில் கட்டடங்களை உயர உயரமாகக் கட்டுகிறார்கள். அங்கே காற்று வசதியில்லை. அதற்காக ஏசி போடுகிறார்கள். இனிமே ஏசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துள்ளது.
ஏசி இயங்க வேண்டும் என்றால் மின்சாரம் தேவை. மின்சாரம் 81% நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அதனால் கார்பன் டை ஆக்சைட் அதிகம் வெளியே உமிழப்படுகிறது. அதற்காக இயற்கை அழிக்கப்படுகிறது. பூமி வெப்ப மயமாகிறது. இயற்கை சீதோஷணம் பாதிக்கப்படுகிறது. அதன் விளைவுதான் இந்த இயற்கை கோரத் தாண்டவம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications