மாணவர் தலைவர் டூ கேரள முதலமைச்சர்! யார் இந்த வி.டி. சதீசன்? முழு விவரம்!
திருவனந்தபுரம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கிறது. இருப்பினும் யார் முதலமைச்சர் என்பதில் நீண்ட இழுபறி நீடித்திருந்தது. இந்நிலையில், புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். யார் இந்த வி.டி. சதீசன் என்பதை பார்ப்போம்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் மேலிடம் வி.டி. சதீசனை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளது. கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டாலும், இறுதியில் சதீசனே முதல்வராக முடிசூட்டப்பட்டுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல்
1964ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரில் பிறந்தார். இவரது தந்தை வனத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். மாணவர் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தவர். NSUI-ன் தேசியச் செயலாளராகவும், எம்.ஜி பல்கலைக்கழக யூனியன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப் பட்டதாரியான சதீசன், சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பறவூர் தொகுதி
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பறவூர் தொகுதி சதீசனின் கோட்டையாகத் திகழ்கிறது. 1996-ல் தனது முதல் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தளராமல் அந்தத் தொகுதியிலேயே கவனம் செலுத்தினார்.
2001 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 6 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த பறவூரை காங்கிரஸின் பாதுகாப்பான தொகுதியாக மாற்றியவர் இவரே.
கோஷ்டி பூசல்கள்
கட்சிக்காக இவ்வளவு உழைத்திருந்தாலும் இவர் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டே வந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல்கள் காரணமாக, தகுதியிருந்தும் பல வாய்ப்புகள் இவருக்கு மறுக்கப்பட்டன. கட்சியின் மாநிலத் தலைவர் பதவி முதல் அமைச்சர் பதவி வரை பலமுறை இவருக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது. இருப்பினும், 2021-ல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சட்டப்பேரவையில் குரல்
சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடனும், தெளிவான வாதங்களுடனும் பேசுவதில் சதீசன் வல்லவர். முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் போன்ற பொருளாதார மேதைகளுக்கே சட்டப்பேரவையில் சவால் விட்டவர். உம்மன் சாண்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, சாதனை அளவாக 33 ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. அதேபோல கட்சியை மறு கட்டமைப்பு செய்ததிலும் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
கட்சியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
2021-ல் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, கோஷ்டி அரசியலைத் தவிர்த்து, மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்துச் செயல்பட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் 20-ல் 18 இடங்களை வென்றதற்கும், 2025 உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும் இவரது தலைமைப் பண்பே முக்கியக் காரணம்.
தற்போதைய பினராயி விஜயன் அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ததன் மூலம், மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications