மேடையில் மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனர்.. ஷாக்காகி போன ஆளுநர்.. என்னாச்சு? பரபரப்பு வீடியோ
திருவனந்தபுரம்: குடியரசு தினவிழாவின்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசியபோது அருகே நின்ற திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் திடீரென்று மயங்கி அப்படியே விழுந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கொடியேற்றினார். இந்த விழாவில் இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதேபோல் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தபிறகு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நம் நாட்டு வீரர்கள் மற்றும் இந்தோனேஷியா படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு, மாநிலங்களின் கலாசாரம், அரசு திட்டங்களை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. அதேபோல் போர் விமானங்களின் சாகசங்கள் நடந்தது. இது நம் நாட்டின் படைப்பலத்தை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் இருந்தது.
அதேபோல் தமிழகத்தில் சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட பலரும் விழாவில் பங்கேற்றனர். இதுபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக்கொடி ஏற்றினர். அதேபோல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி என்பது கட்சி தலைவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அந்த வகையில் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று குடியரசு தினவிழா நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு அவர் மாநில மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் அருகே திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் நின்று கொண்டிருந்தார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மேடையில் பேசி கொண்டிருந்தபோதே திடீரென்று போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் மயங்கி பொத்தென மேடையில் விழுந்தார். இதை பார்த்ததும் ஆளுநர் தனது பேச்சை நிறுத்தினார். மேலும் அங்கிருந்த பிற போலீசார், பாதுகாவலர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டனர்.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தொடர்ந்து அவர் உடல்நலம் தேறினார். அதன்பிறகு மீண்டும் அவர் குடியரசு தினவிழாவில் பங்கேற்றார். இதற்கிடையே தான் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மேடையில் பேசியபோது போலீஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் மேடையில் மயங்கி விழுவது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications