உலக புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு நோட்டீஸ்.. 1.57 கோடி ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் 100% அபராதம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகக் குழுவுக்கு மத்திய ஜிஎஸ்டி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1.57 கோடியை உடனே செலுத்துமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூலித்த கோயில் நிர்வாகம், அதனை முறைப்படி செலுத்தவில்லை என்றும் அதனால் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் உலக புகழ் பெற்ற திருக்கோயிலான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். திருவனந்தபுரம் நகரத்தின் பெயரே, திரு+அனந்த+புரம் என்னும் பெயரில் தான் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் தொடங்கி இந்த கோயில் இன்று வரை பக்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயில் நிர்வாகக் குழுவுக்கு மத்திய ஜிஎஸ்டி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1.57 கோடியை உடனே செலுத்துமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு விலக்குகளை மேற்கோள் காட்டியிருந்தது ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம். ஆனால் கோயில் நிர்வாகக் குழுவின் விளக்கத்தை ஜிஎஸ்டி அமைப்பு ஏற்கவில்லை.
கோயிலை சுற்றியுள்ள இடங்களை வாடகைக்கு விட்டது, பக்தர்களுக்காக வழங்கப்படும் ஆடைகள், சாமி படங்களின் விற்பனை, யானைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களுக்கு கோயில் நிர்வாகக் குழு ஜிஎஸ்டியை செலுத்தவில்லை என ஜிஎஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, நோட்டீசுக்கு பதில் அளித்து விளக்கம் அளிப்பதாக கோவில் செயல் அலுவலர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என்ற ரகசிய தகவலை அடுத்து, திருவனந்தபுரம் மத்திலகம் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் நடத்திய சோதனையில் தான் , சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மீது ஜிஎஸ்டி வசூலித்ததும், ஆனால் அந்த தொகைளை முறையாக கோயில் நிர்வாகம் செலுத்தவில்லை என்பதையும் ஜிஎஸ்டி துறை கண்டுபிடித்தது. அதன்பின்னர் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் அளித்த கோயில் நிர்வாகத்தினர், பல்வேறு விதிவிலக்குகளை சுட்டிக்காட்டியதுடன்,ரூ.16 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை என்று தெரிவித்தனர். அதில் 3 லட்சம் தருவதாகவும் தெரிவித்தனர். ஆனால், கோயில் நிர்வாக குழுவின் பதிலை நிராகரித்த ஜிஎஸ்டி குழு அதிகாரிகள், 1.57 கோடி ரூபாய் வரியை உடனடியாக செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கோயில் நிர்வாக குழு இந்த ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்த தவறினால், அதற்கு 100% அபராத தொகையை 18% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி பங்கான ரூ.77 லட்சம் மற்றும் வெள்ள செஸ் ரூ.3 லட்சம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் ஜிஎஸ்டி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜிஎஸ்டி நோட்டீசுக்கு மிகத்தெளிவான விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் செயல் அலுவலர் உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications