மான் போல அழகு.. முகம் முழுசா சந்தோஷம்.. அநியாயமா கொன்னுட்டீங்களே.. வைரலாகும் விஸ்மயா டிக் டாக் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் விஸ்மயா அவரது கணவரால் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. வரதட்சணை கொடுமையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Recommended Video
இப்போது, விஸ்மயா உயிரோடு இருக்கும்போது தனது சகோதரனுடன் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இளம் மான் போல தோற்றமளித்து, மகிழ்ச்சி கடலில் நீந்தியது போல காணப்படுகிறார் விஸ்மயா. ஆனால் திருமணம் செய்த பிறகு அவர் வாழ்க்கை சின்னாபின்னமாகி விட்டதே என்று ஒப்பிட்டு பார்த்து, வருந்திப்போயுள்ளனர் கேரள சேட்டன், சேச்சிமார்கள்.

கேரள இளம் பெண்
கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நல்ல குடும்ப பின்னணி. ஜாலியான வாழ்க்கை. இந்த நிலையில்தான், சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ் கிரண் குமார் என்ற நபரை கடந்த வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்போது முதல் விஸ்மயா வாழ்க்கையில், புயல் வீசத் தொடங்கியது.

போன வருடம் நடந்த திருமணம்
2020மாவது ஆண்டு மார்ச் மாதம், இவர்களுக்கு திருமணம் நடந்தது. வீட்டில் சம்பந்தம் பேசி, குடும்பத்தார் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி உள்ளனர். இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனால் கூடுதலாக பணம் கேட்டு விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார் கிரண்.

வரதட்சணைக் கொடுமை
அடிக்கடி பிறந்த வீட்டுக்கு அனுப்புவதும், பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்வதுமாக விஸ்மயாவை பந்தாடியுள்ளார் கிரண். சில கொடுமைகளை தனது அப்பாவிடம் கூட சொல்லாமல் மறைத்துவிட்டார் விஸ்மயா. ஆனால் விஸ்மயாவின் சித்தப்பா மகனுக்கு மெசேஜ் அனுப்பி விஸ்மயா வருந்தி இருக்கிறார். தன்னை மோசமாக தாக்கிய புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளார். இந்த நிலையில்தான் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.

கணவன் கைது
விஸ்மயாவின் அப்பா திரிவிக்ரமன் போலீசில் அளித்த புகாரின்பேரில் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்மயா உடலில் மோசமான காயங்கள் இருந்துள்ளன. கணவன் கொடுமைப்படுத்தியதை கூறிய ஆதாரங்களும் உள்ளன. இப்படியாக 24 வயது இளம்பெண் விஸ்மயா வாழ்க்கை முடிந்து போனது.

டிக் டாக் வீடியோ
இந்த நிலையில் விஸ்மயா அவரது சகோதரனுடன், செய்த டிக்டாக் வீடியோ இப்போது, வைரலாக சுற்றி வருகிறது. தங்கச்சியின் தோழிமார்கள் வீட்டுக்கு வந்தால், அண்ணன்கள் மேக்கப் செய்வது அதிகம்தான் என்று விஸ்மயா அவரது சகோதரனை பார்த்து கூறுவது போல ஒரு வீடியோ உலவுகிறது. அதில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் விஸ்மயா. இப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தவரை கிரண் என்ற கொடூரன் தனது கோரக் கரங்களால் உருத் தெரியாமல் மாற்றிப் போட்டுவிட்டாரே என்ற குமுறல்கள் கேரளாவில் எதிரொலிக்கின்றன.












Click it and Unblock the Notifications