Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரணப் படுக்கையில் கிடந்தபோதும் காதலியை காட்டிக் கொடுக்காத ஷாரோன்.. தீர்ப்பில் நீதிபதி சொன்ன விஷயம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப் படுக்கையில் இருந்தபோதும் கூட காதலி கிரீஷ்மா, தனக்கு விஷம் கலந்து கொடுத்ததை காதலன் ஷாரோன்ராஜ் காட்டிக் கொடுக்காததை தீர்ப்பில் சுட்டிக் காட்டி உள்ளது நீதிமன்றம்.

கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளை சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

sharon raj murder case kerala court

ஷாரோன் ராஜ் மரணம்

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஷாரோன் ராஜ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கள் மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது.

கொலை செய்த காதலி

நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். முதலில் அதற்கு கிரீஷ்மா முதலில் சம்மதிக்கா விட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்தார்.

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த அவருடன் சுற்றிய போட்டோக்கள், வீடியோக்களை மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

கிரீஷ்மா கைது

இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வருடங்களாக நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை

கிரீஷ்மாவுக்கு எதிராக கொலை, விஷம் கொடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து இருவருக்குமான தண்டனை இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி பஷீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், அவரது மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். ஷாரோன் ராஜ் கொலை வழக்கை விசாரித்த கேரள போலீசாருக்கு நீதிபதி பஷீர் பாராட்டு தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பில் முக்கியமான விஷயம்

காதலனுக்கு விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பில் சில முக்கியமான விஷயங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

"ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உன்னதமான உணர்வையும் சேர்த்தே கிரீஷ்மா கொலை செய்துள்ளார். ஷாரோன் ராஜை, க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து வீட்டிற்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

திட்டமிட்ட படுகொலை

கஷாயம் கொடுக்கும்போது ஷாரோன் ராஜ் அதனை தனது செல்போனில் பதிவு செய்தபோது, வேண்டாம் என மறுத்துள்ளார். இந்த வீடியோவை ஷாரோன் பதிவு செய்தபோதே அவருக்கு ஏதோ தவறாக நடக்கிறது என சந்தேகம் தோன்றி இருக்க வேண்டும். ஆனாலும், காதலி கொடுத்ததால் அவர் குடித்துள்ளார். ஒருமுறை அல்ல, பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று உள்ளார். எனவே இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு படுகொலை.

காட்டிக் கொடுக்காத ஷாரோன் ராஜ்

கிரீஷ்மா மீதான காதலுக்கு அடிமையாக இருந்த ஷாரோன் ராஜ், உள் உறுப்புகள் அழுகிய நிலையில், 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப் படுக்கையில் இருந்தபோதும் காதலியை காட்டிக்கொடுக்கவில்லை. தன் பெற்றோரிடம் கூட கிரீஷ்மா மீது குற்றம்சாட்டவில்லை. தான் இறந்தாலும், கிரீஷ்மா தண்டிக்கப்படுவதை ஷரோன் விரும்பவில்லை. துரோகத்தை எதிர்கொண்டாலும், மரணப் படுக்கையிலும் கிரீஷ்மாவை ஷாரோன் ராஜ் நேசித்துள்ளார்.

தந்திரம் செய்த கிரீஷ்மா

கிரீஷ்மா ஷரோனுக்கு விஷம் கொடுத்தது, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடந்தது. ஷாரோன் தன்னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாக் கிரீஷ்மா சொன்னதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஷாரோனை கொலை செய்துவிட்டு அதனை மறைக்க பல தந்திரங்களையும் கையாண்டுள்ளார் கிரீஷ்மா.

காதலுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ள கிரீஷ்மாவுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து, அவரின் வயதையோ, அவருக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதையோ கருத்தில் கொள்ள முடியாது. எனவே கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+