நிலம்பூர் இடைத்தேர்தல்; கேரளாவில் மீண்டு எழுந்த காங்கிரஸ்! சிபிஎம் வேட்பாளர் தோல்வி
திருவனந்தபுரம்: மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அன்வர், ராஜினாமா செய்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், ஆளும் சிபிஎம் கட்சி வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ஆரியாடன் செளகத் வெற்றி பெற்றிருக்கிறார்.
அன்வர் கடந்த 2021ல் சுயேட்சையாக களமிறங்கியிருந்தார். சிபிஎம் இவருக்கு ஆதரவு கொடுத்திருந்தது. தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆரம்பத்தில் சிபிஎம் உடன் நெருக்கமாக இருந்த இவர் பின்னாட்களில் கட்சி தாவ தொடங்கினார். காங்கிரஸில் சேர்ந்த அவருக்கு, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்து காங்கிரஸ் அழகு பார்த்தது. ஆனால், அங்கும் நிலைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் நோக்கி ஓடினார். இதனால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை பாயும் சூழல் எழுந்தது.

இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மீண்டும் சுயேட்சையாகவே களமிறங்கியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சிபிஎம் சார்பில் ஸ்வராஜ், பாஜக சார்பில் மோகன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.
மதியம் 12 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியாக இருக்கும் சிபிஎம்-ன் வேட்பாளர் பின்னடைவை சந்தித்திருக்கிறார். மறுபுறம் காங்கிரஸ் வேட்பாளர் ஆரியாடன் செளகத் 11,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். போதுக்கல்லு பஞ்சாயத்து மற்றும் நிலம்பூர் நகராட்சியில் வாக்குகள் குறைந்ததே இந்த தேர்தலில் சிபிஎம் பின்னடைவை சந்திக்க காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் சிபிஎம்-க்கு வலுவான வாக்கு வங்கிகள் இருந்தன.
இந்த தேர்தலை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கையில் முதல் 5 சுற்றில் முன்னிலை பெற்றுவிட்டால் போதும், வெற்றி கிடைத்துவிடும் என்று சொல்லப்பட்டது. இதற்காக சிபிஎம் போதுக்கல்லு பஞ்சாயத்து மற்றும் நிலம்பூர் நகராட்சியை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், வாக்காளர்கள் காலை வாரியுள்ளனர்.
முதல் நான்கு சுற்றுகளில் சுயேட்சை வேட்பாளர் அன்வரின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால் 6வது சுற்று முடிவு வரும்போது அது காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது. நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் சிபிஎம் களத்தில் பின்னாடியே வந்ததால், போட்டி நீடித்தது.
16வது சுற்று வரை 65,942 வாக்குகளுடன் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. சிபிஎம் வேட்பாளர் 55,460 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார். அன்வர் வெறும் 16,929 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் மதியம் 1.15 மணி நிலவரப்படி முடிவுகளை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில், காங்கிரஸ் வேட்பாளர், சிபிஎம் வேட்பாளரை விட 11,077 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஆரியாடன் செளகத் - 77,737
சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜ் - 66,660
சுயேட்சை வேட்பாளர் அன்வர் - 19,760
பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் - 8,648
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த தேர்தல் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இதில் ஆளும் கட்சி தோல்வியடைந்திருப்பது அக்கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications