"வெள்ளத்தின் போது வழங்கிய அரிசி இலவசமல்ல".. கேரளாவுக்கு மத்திய அரசு கறார் பதில்.. சிபிஎம் விளாசல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மத்திய அரசு வழங்கிய அரிசி இலவசமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.
2018ம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் அம்மாநிலம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. உயிரிழப்புகள் ஒருபுறமும், உடமை இழப்புகள் மறுபுறம் வாட்டி எடுத்தது.
இந்நிலையில், மத்திய அரசு இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன் வந்தது. இதற்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

கறார்
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 59,540 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியது. ஆனால் இந்த அரிசிக்கு பணம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது ரேஷன் அரிசிதான். ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவில் ரேஷன் அரிசிகள் காலாவதியாகி கடலில் கொட்டப்படுகிறது. அதைதான் மத்திய அரசு எங்களுக்கு கொடுத்திருக்கிறது. இதற்கு கூட கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று கேரளா அரசு கேள்வியெழுப்பியது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கறாராக இருந்தது. எப்படியாவது பணத்தை பெற்றே தீர்வது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.

இலவசமல்ல
ஒருவேளை கேரள அரசு பணம் கொடுக்கவில்லையெனில், மாநிலத்திற்கு வழங்கப்படும் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து அந்த தொகை கழித்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் அரிசிக்கான நிதி ரூ.205.81 கோடியை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதற்கு முன்னர் இந்த நிதியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில அரசு எத்தனையோ முறை தொடர்ந்து வலியுறுத்தி இருந்தும் மத்திய அரசு இதனை தள்ளுபடி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கேரள எம்பிக்கள் கேள்வியெழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், "கேரளாவுக்கு வழங்கப்பட்ட அரிசி இலவசமல்ல" என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு
மேலும், கேரள அரசு அம்மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இது கேரளா மட்டுமல்லாது பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு விஷயம் என்னவெனில், வெள்ள மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ஹெலிக்காப்டருக்கு கூட மத்திய அரசு கட்டணம் கேட்டிருக்கிறது என்பதுதான். எனவே கேரள அரசு மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. மத்திய அரசு தனக்கு சாதகமான அல்லது பாஜக ஆட்சியிலிருக்கும் இதர மாநிலங்களிடம் ஒரு மாதிரியும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிடம் வேறு மாதிரியும் நடந்துக்கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது.

சிபிஎம்
ஜிஎஸ்டி நிலுவை தொகையில் தொடங்கி ரயில்வே திட்டம் வரை மத்திய அரசு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பாரபட்சமான முறையில் நிதி ஒதுக்கி வருவதாக தமிழ்நாட்டு உட்பட பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் அதே பாரபட்சத்தை கடைப்பிடித்து வருவதாக கேரள சிபிஎம் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications