வயநாடு நிலச்சரிவு..தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி சொன்ன பதில் என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் 6-வது நாளாக மீட்புப் பணிகள் இன்றும் நடைபெற்றன. இந்த மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்த சட்டரீதியான வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவின் துயரம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போது வரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பதே இதுவரை தெரியவில்லை.

1000-க்கும் அதிகமான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போய்விட்டன. பல ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உடல்களை சாலியாறு ஆற்றில் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வயநாடு பகுதிக்கு சென்று நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியும் இன்று வயநாடு பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் மீட்பு பணி நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையிருடன் ஆலோசனையும் நடத்தினார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தற்போதைய நிலையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள்தான் முக்கியமானவை. ஆகையால் இந்த பணிகளுக்குதான் முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக்குப் பின்னரே மத்திய அரசின் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications