கேரள நண்பனுக்கு ஜுவல்லரி வாங்கி தந்த விஜயகாந்த்! சேல்ஸ்மேன் கேப்டன் ஆன கதை!
திருவனந்தபுரம்: விஜயகாந்த் மறைவால் திருவனந்தபுரம் மக்கள் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
தமிழ்த் திரைப்படங்களைத் தவிர்த்து பிறமொழி படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். அவரது மறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு குடும்பம் உட்பட அந்த நகரம் சோகத்தில் மூழ்கி இருப்பதாகக் கேரள தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த்திற்கும் மலையாள சினிமாவுக்கு என்ன சம்பந்தம்? அதற்கு நாம் குறைந்தது 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிப் போக வேண்டும். அந்த ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள கடை ஒன்றில் விஜயகாந்த் சேல்ஸ்மேன் ஆக வேலை பார்த்திருக்கிறார் எனக் கூறி இருக்கிறார் கேரள நபர் ஒருவர்.
விஜயகாந்த் இளைமையாக இருந்த காலத்தில் அவர் கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் சென்றிருக்கிறார். அங்கே சுந்தரராஜன் என்பவரும் அவரது சகோதரி முக்தாபாய் மற்றும் கண்ணன் என்பவரும் தங்கி இருந்துள்ளனர். அவர்களின் பூர்வீகம் மதுரைதான்.
ஆகவே திருவனந்தபுரம் போன விஜயகாந்த் கிள்ளிப்பாலம் சாலையில் உள்ள அவர்களது வீட்டில் தங்கி இருக்கிறார். மேலும் கண்ணனின் கடையில் சேல்ஸ்மேன் ஆக வேலை பார்த்தும் இருக்கிறார்.

அதைப்பற்றி கேரள ஊடகம் 'சேல்ஸ்மேன் முதல் சூப்பர் ஸ்டார் வரை; விஜயகாந்த்துக்குக் கனவு கற்றுக் கொடுத்த ஆனந்தபுரி' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்தக் காலத்தில் விஜயகாந்த் நண்பராக இருந்த கண்ணனின் மாப்பிள்ளை 'மாத்ருபூமி'க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "விஜயகாந்த் என் மாமனாரின் நண்பர். அவர் முதன்முதலாகத் திருவனந்தபுரத்திற்கு 1982இல் வந்திருந்தார்.
அவர் என் மாமனார் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். அப்போது மலையாள நடிகர் ஜெயன் படங்களைப் பார்ப்பார். அவரைப் போல ஆர்ம்ஸ் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜயகாந்த். அப்படி அவரைப் போல உடற்பயிற்சி செய்து உடம்பை ஏற்றுவார்.

பகல் முழுவதும் கடையில் சேல்ஸ்மேன் வேலை பார்த்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள அஜந்தா தியேட்டர் போய் நண்பர்களுடன் படங்கள் பார்ப்பார். அவருக்கு சினிமா ஆசை இருந்தது. படம் பார்த்துவிட்டு இரவு கையேந்தி கடைகளில் தட்டு தோசை சாப்பிடுவார்.
அவர் திருவனந்தபுரத்திற்கு வெல்வெட் ஷாம்பு விற்பனைப் பிரதிநிதியாகத்தான் வந்தார். எல்லா கடைகளுக்கும் போய் ஷாம்பு பாக்கெட் போடுவார். அதன்பிறகு அவர் மீண்டும் சென்னைக்கே சென்றுவிட்டார்.
அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்த பிறகு ஷூட்டிங் வேலைகளுக்காகக் கோவளம் வருவார். அடிக்கடி வருவார். அப்படி 1984இல் ஒரு முறை வந்தார். அப்போது என் மாமனார் ஒரு ஜூவல்லரியை நடத்தி பெரிய நஷ்டமாகிவிட்டார். ஆகவே கடையை விற்றுவிட்டார். குடி இருந்த வீட்டையும் கடன் தொல்லையால் விற்றுவிட்டார். மொத்தத்தில் விஜயகாந்த் நண்பர் கண்ணன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
அந்தச் செய்தியை அப்போது விஜயகாந்த் விசாரித்தார். உடனே தனது நண்பன் கஷ்டப்படுகிறார் என்று அந்த ஜூவல்லரியை மீண்டும் பணம் கொடுத்து வாங்கி கண்ணனிடம் கொடுத்தார். அவ்வளவு பெரிய உதவியைச் செய்தவர் விஜயகாந்த். அவர் பழசை மறக்காத நல்ல மனிதர்" என்கிறார் கண்ணனின் மருமகன் ஜவஹர் தாஸ்.

"குறைந்தது 4 மாதங்கள் என் மாமனார் வீட்டில் அவர் அந்தக் காலத்தில் தங்கி இருந்தார். அஜந்தா, செண்ட்ரல் தியேட்டர் எனப் பல தியேட்டருக்குப் போய் படங்களைப் பார்ப்பார்கள். அன்றைக்குத் திருவனந்தபுரம்தான் சினிமா உலகின் முக்கிய ஸ்தலமாக இருந்தது. பல நடிகர்கள் திருவனந்தபுரத்தில்தான் வசித்து வந்தார்கள்.
விஜயகாந்த் அன்றைக்குக் கண்ணனுக்கு வாங்கி கொடுத்த ஜூவல்லரியின் பெயர் ஜோதி. இது கிள்ளிப்பாலம் சாலையில் ஆசாத் கடைக்கு அருகிலிருந்துள்ளது. அந்தக் கடையைத்தான் தனது சொந்த பணத்தில் வாங்கி கொடுத்துள்ளார். ஆகவே, விஜயகாந்த் சினிமா வாழ்க்கைக்குத் தமிழ்நாடு மட்டும் சொந்தமல்ல; திருவனந்தபுரமும் ஒரு காரணமாக இருந்துள்ளது.

அதனடிப்படையில் தான் திருவனந்தபுர மக்கள் விஜயகாந்த் மறைவைக் கேட்டு கண்ணீர் வடித்து வருகின்றனர். அதில் கூடுதலாகக் கண்ணனின் குடும்பத்தார் இன்று பெரிய சோகத்தில் மூழ் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications