கிறிஸ்தவர்கள் தான் பெரும்பான்மை.. ஆனாலும் வென்று காட்டிய பாஜக! வக்பு சொத்தால் மனம்மாறிய மக்கள்
திருவனந்தபுரம்: கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2வது இடத்துக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்ததேர்தலில் பாஜக வெல்ல அங்குள் நிலவும் வக்ஃபு சொத்து பிரச்சனை தான் முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதேவேளையில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணிக்கு கடும் பின்னடைவை சந்தித்தது. கேரளாவில் காலுன்ற துடிக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தல் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்றாலும் 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் பாஜகவினருக்கு இன்னொரு சுவாரசியமான செய்தி வெளியாகி உள்ளது. பொதுவாகவே பாஜகவுக்கு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் ஓட்டுகள் கிடைக்காது என்று சொல்வது உண்டு. இருப்பினும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், கேரளாவில் கிறிஸ்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இது இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. இந்த வார்டு காங்கிரஸ் வசம் இருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 வது இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்தையும் பிடித்தனர்.
இதன் பின்னணியில் வக்ஃபு வாரியம் சார்ந்த சொத்து பிரச்சனை தான் முக்கிய காரணம். அதாவது எர்ணாகுளம் மாவட்டத்தில் பள்ளிபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு முனம்பம் கடகபுரம் என்ற பெயரில் முதலாவது வார்டு உள்ளது. இந்த வார்டில் பாஜக வேட்பாளர் குன்ஜிமோன் அகஸ்டீன் 582 ஓட்டுகள் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை வீழ்த்தினார்.
இந்த பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இது கடற்கரை பகுதியாகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள். இங்குள்ளவர்கள் லத்தின் கத்தோலிக் மீனவ சமுதாய மக்கள் ஆவார்கள். இவர்கள் நீண்டகாலமாக இங்கேயே வசித்து வருகின்றனர். தண்ணீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றை செலுத்தி முறைப்படி வசித்து வந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த 2019 ம் ஆண்டில் வக்ஃபு வாரியம் முனம்பம், சேரை, பல்லிக்கல் பகுதிகளில் சுமார் 404 ஏக்கர் நிலத்தை வக்பு சொத்து என அறிவித்தது. இதனை கிராம மக்கள் எதிர்த்தனர். மேலும் தங்களை கிராமத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் இருந்தனர்.
வக்ஃபு சொத்து என்று அறிவிக்கப்பட்டதும் கேரள அரசு அந்த மக்களிடம் வரிப்பணம் வாங்க மறுத்தது. இது கூடுதலாக அந்த மக்களை பயமுறுத்தியது. அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பாஜகவினர் அந்த மக்களுக்கு ஆதரவாக இருந்தனர். 400 நாட்களுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தினர். கேரளாஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வக்ஃபு வாரிய சொத்து விவகாரத்தை மையப்படுத்தி விவகாரத்தில் முனம்பம் பகுதி மக்களின் பிரச்சனை நாடாளுமன்றம், கேரளா சட்டசபைகளில் எதிரொலித்தது. கடைசியாக கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் கேரளா உயர்நீதிமன்றம் முனம்பம் பகுதியில் உள்ள நிலத்தை வக்ஃபு சொத்தாக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இத்தகைய நடைமுறை என்பது நில அபகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதற்கிடையே தான் அங்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனை மக்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. இதையடுத்து தேர்தல் புறக்கணிப்பு முடிவை கைவிட்டு வக்ஃபு சொத்து விவகாரத்தில் ஆதரவாக இருந்த பாஜகவுக்கு ஓட்டளித்தனர். இதனால் பாஜக வேட்பாளர் குன்ஜிமோன் அகஸ்டீன் வெற்றி பெற்றுள்ளார்.
வக்ஃபு போராட்டத்தில் முனம்பம் மக்களுடன் பாஜக நின்றதால் ஓட்டளித்து எங்களின் வேட்பாளரை வெற்றி பெற வைத்ததாக கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் அனூப் ஆண்டனி ஜோசப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications