விஞ்ஞானிகளுக்கு வயநாடு செல்ல தடையா? திடீர் பல்டியடித்த கேரள அரசு.. வாபஸான உத்தரவு.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு விஞ்ஞானிகள் செல்லக்கூடாது. மேலும் நிலச்சரிவு தொடர்பான கருத்துகளை கூறக்கூடாது என கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது கேரள அரசு பல்டியடித்துள்ளது. மேலும் தடை உத்தரவை கேரளா அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமாக வயநாடு மாவட்டம் உள்ளது. கடந்த 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அப்போது 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு என்பது ஏற்பட்டது.

இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு மக்கள் மண்ணில் புதைந்தனர். இன்று 4வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 316 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் விஞ்ஞானிகள், அறிஞர்கள் வயநாடு பற்றி கருத்துக்களை பகிர வேண்டாம். கருத்து தொடர்பான அறிக்கைகளை பகிர வேண்டாம். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு நேரிலும் செல்ல வேண்டாம். பேரிடர் பாதித்த பகுதியில் ஆய்வு நடத்த வேண்டுமானால், கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என மீட்புதுறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டின் கு பிஸ்வால், அறிவியல் மற்றும் டெக்னாலஜி துறையின் முதன்மை செயலாளருக்கு அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளார். இதையடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் பின்னணியில் 2 காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று வதந்திகள் பரவுவதை தடுப்பது. 2வது விஷயம் என்பது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை புரோட்டாகால் படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினரை தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேறு யாரேனும் செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவு என்பது பெரும் விவாதத்தை கிளப்பியது. நிலச்சரிவு தொடர்பான விஷயங்களை கேரளா அரசு மறைக்க முயல்கிறது. இது கேரளா அரசின் வாய்ப்பூட்டு நடவடிக்கை என பலரும் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் தான் அந்த உத்தரவை வாபஸ் பெற கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛உத்தரவை அதிகாரிகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை தலைமை செயலாளரை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.
இதையடுத்து கேரளா தலைமை செயலாளர், ‛‛மாநில அறிவியல் ஆய்வுகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்படவில்லை. தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், மீட்பு நடவடிக்கையில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் வாங்கினார்.












Click it and Unblock the Notifications