உடனே கிளம்புங்க.. பெரிய ஆபத்து வரப்போகுது! போன வருஷமே கணித்த வயநாடு 8ஆம் வகுப்பு பள்ளி மாணவி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 206 பேர் காணவில்லை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வயநாட்டை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் எழுதிய சிறுகதை இணையத்தில் பரவி வருகிறது. அந்த சிறுமியின் தந்தை, நண்பர்கள் உள்பட அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு அங்குள்ள மலைக்கிராமங்களை சூறையாடியது. சூரல்மலை - முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் பல இடங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனது. சூரல்மலை - முண்டக்கை இடையே உள்ள பாலம் உடைந்ததால் வெள்ளத்தை கடந்து ராணுவம், பேரிடர் மீட்பு படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை.

இதனால் சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே கடந்த 3 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட முடிந்தது. இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் தற்காலிகமாக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்தனர். அந்த வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 500 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மண்ணில் புதைந்தவர்களை நவீன எந்திரங்கள், மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 5-வது நாளாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனால், மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் தேடுதல் பணியில் திறமை மிக்க தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தன்னார்வலர்களும் மீட்பு பணியில் உள்ளனர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் சிக்கியுள்ளார்கள் என்றும், அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடக்க போகிறது என்பது போல வயநாட்டை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் எழுதிய சிறுகதை தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. அந்த சிறுகதையில் சிறுமி கூறியவை அப்படியே தற்போது நடந்துள்ளது என பலரும் வியந்து போய் உள்ளனர். வயநாடு சூரல்மலை அருகே உள்ள வெலர்மலா என்ற இடத்தில் அர்சு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் லயா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி தான் இந்த சிறுகதையை எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு பள்ளி இதழிற்காக சிறுமி லயா சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "பெரிய நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி பறவையாக மாறி வந்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை இங்கே வெள்ளம் வரப்போகிறது, பெரிய ஆபத்து நேரிட போகிறது என்று எச்சரிக்கிறார். தான் பாதித்தது போல் தன் கிராம மக்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்படி செய்வது போல கதையில் சிறுமி கூறியுள்ளார்.
மேலும் அந்த சிறுகதையில், அந்த கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகள் வீட்டுக்கு தெரியாமல் நீர்வீழ்ச்சிக்கு வருகின்றனர். அவர்களை அந்த பறவையான அந்த பெண் காப்பாற்றி வேறு பகுதிக்கு அழைத்து செல்கிறார். அப்போது அந்த நீர்வீழ்ச்சியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி அந்த பகுதி அழிந்துவிடுகிறது" இது போன்று அந்த சிறுமி சிறுகதை எழுதியுள்ளார்.
தற்போது அந்த சிறுமி எழுதிய கதையில் கூறியவாறே, சிறுமி படிக்கும் பள்ளி பகுதியான வெலர்மலா நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமானது. இதில் அந்த ஊரை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த சிறுகதையை எழுதிய சிறுமியின் தந்தையும் உயிரிழந்துள்ளார். அந்த பள்ளிக்கூடத்தில் படித்த 32 மாணவ மாணவிகளும் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications