வயநாடு சூரல் மலையில் கடைசி நிமிடம் வரை உயிருக்கு போராடிய பெண்.. சமையலறையுடன் புதைந்த சோகம்
திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டம் சூரல் மலையில் உள்ள பள்ளி சாலையில் வசித்து வந்த பெண், கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை காப்பாற்ற கடைசி நிமிடம் வரை உயிருக்கு போராடிய நிலையில், சமையல் அறையுடன் மண்ணில் புதைந்துள்ளார். இந்த சோக சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல் மலையில் வசித்த ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணில் புதைந்து விட்டனர். காட்டாற்று வெள்ளமும், மிக கடுமையான நிலச்சரிவும் சூரல் மலையை மொத்தமாக அழித்துவிட்டது. இந்த அழிவு எப்படிப்பட்டது என்றால், 2018ல் கேரளாவில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதை மையப்படுத்தி 2018 என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி இருந்தது. அந்த படம் ஓரளவு கேரளாவின் நிலையை தத்ரூபமாக எடுத்திருப்பார்கள்.

அதில் ஒரு பெண் குடும்பத்துடன் கழுத்தளவு நீரில் நின்று தன் குழந்தையை காப்பாற்ற போராடுவார். யாராது தங்களை காப்பாற்ற வராமாட்டார்களா என்று ஏங்குவார். அவரை படத்தின் ஹீரோவான டோவினோ தாமஸ் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றுவதாக இருக்கும். இறுதியாக டேவினோ தாமஸ், கண் பார்வை இல்லாதவரை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்டு விடுவார்.. இப்படியாக படம் முடியும். இவை எல்லாம் 2018ல் எர்ணாகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்ல முடியாது படிப்பினை என்று சொல்லாம்.
அதேபோன்று தான் வயநாட்டிலும் நடந்துள்ளது. ஆனால் கடந்த முறை வெள்ளம் மட்டுமே வந்தது. இடுக்கி தொடங்கி எர்ணாகுளம் வரை உள்ள மாவட்டங்களை மோசமாக பாதித்தது. நிலச்சரிவு இருந்தது என்றாலும் வயநாட்டில் ஏற்பட்டது போல் இல்லை. வயநாடு சூரல் மலையை மொத்தமாக காவுவாங்கி சென்றுவிட்டது காட்டாற்று வெள்ளம். இங்கு நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றி பார்ப்போம்.
வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள பள்ளி சாலையில் ஜோஜோ என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி நீத்து (வயது 30). இவர் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் மகன் இருக்கிறார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு, ஜோஜோவின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்திருந்தது. உடனே நீத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டிற்கு முன்னும், பின்னும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை கண்டார். இதனால் பீதி அடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து போனார்.
இதையடுத்து தான் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, சூரல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. தயவு செய்து யாராவது வந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு, இப்போது வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. நிலச்சரிவு அதிகரித்தால் நாங்கள் அனைவரும் அடித்து செல்லப்பட்டு விடுவோம் என்று அழுதபடி கூறியிருக்கிறார்.
இதனிடையே அவர்களை காப்பாற்ற ஜோஜோவின் நண்பர்கள், சூரல்மலை பகுதிக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அவர்களால் உதவிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து நீத்துக்கு அழைப்பு வந்தது.
அப்போது நீத்து, எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதார். அதன் பின்னர் நீத்து சமையல் அறையில் நின்று யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஏங்கி கண்ணீருடன் நின்றிருக்கிறார். ஆனால் கடுமையான காட்டாற்று வெள்ளம், பாலம் உடைந்து போனது போன்ற காரணங்களால் யாராலும் சூரல்மலைக்கு வரமுடியவில்லை..
இதனிடையே நேரம் செல்ல செல்ல, ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீட்டின் சமையல் அறை அடித்து செல்லப்பட்டது. அத்துடன் நீத்துவும் அடித்து செல்லப்பட்டார். அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. வீட்டின் மற்ற 2 அறைகளில் இருந்த ஜோஜோ, அவரது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்கள். நிலச்சரிவில் சிக்க போகிறோம் என அறிந்து தன்னையும், குடும்பத்தினரையும் காப்பாற்ற போராடிய பெண் நிலச்சரிவில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications