அனுமதிக்கப்படாத வனப்பகுதியான பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை ஏற்றுவது யார் தெரியுமா?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை ஏற்றுவது யார் தெரியுமா? இன்று மாலை இந்த ஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆண்டுக்கு 5 முறை திறக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணியும் பக்தர்கள் மகர விளக்கு நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

இதற்காக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சன்னிதானம் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பிறகு அங்கிருந்து ஜோதி தரிசனம் பார்க்க அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்கள். புல்மேட்டில் இருந்து பார்த்தால் ஜோதி தரிசனம் நன்றாக தெரியும் என்பதால் அங்கு சிலர் குவிந்து வருகிறார்கள்.
மகர ஜோதி என்பது தை மாதம் மகர ராசியில் சூரியன் வரும் இந்த மாதத்திற்கு மகர மாதம் என்று பெயர், இந்த மாதத்தின் முதல் நாள் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். ஐயப்பன் பந்தள அரண்மனையில் வளர்ந்தவர் என்பதால் அவரை காண ஆண்டுதோறும் பந்தள மகாராஜா சென்று வந்தார். அப்போது பந்தளத்திலிருந்து ஆபரணங்களை கொண்டு சென்று யோக நிலையில் இருக்கும் ஐயப்பனுக்கு அணிவித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த ஆபரணங்களுடன்தான் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். தை முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். இதை பார்க்க கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் வருகிறார்கள்.
மகர ஜோதி யாரால் ஏற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலைக்கு எதிரே உள்ளது கொச்சுபம்பா என்ற ஊர் ஆகும். இந்த ஊருக்கு அருகில்தான் பொன்னம்பலமேடு மலை உள்ளது. இங்குதான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது. இங்குள்ள பெரிய மேடையின் மீது கற்பூரங்கள் ஏற்றப்படுகின்றன.
அது போல் ஜோதியாக தெரிகிறது. மகர மாதத்தில் இந்த ஜோதி ஏற்றப்படுவதால் மகர ஜோதி என பக்தர்கள் அழைக்கிறார்கள். பின்னர் அந்த கற்பூரம் ஈரச்சாக்கு பைகளால் அணைக்கப்பட்டு மீண்டும் அந்த கற்பூரத்தை ஏற்றி மூன்று முறை தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தரப்படுகிறது.
இந்த மகர ஜோதியை பொன்னம்பலமேட்டில் உள்ள மலைவாழ் மக்கள் ஏற்றுவதாக சொல்கிறார்கள். மேலும் பொன்னம்பலமேட்டிற்கு அருகில் கொச்சுபம்பா மின்னேற்று நிலையம் உள்ளது. இங்குள்ள அணையில் இருந்து நீர் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கேரளா மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த மகர ஜோதியை கேரள மின்சார வாரிய ஊழியர்கள் ஏற்றுகிறார்கள் என்கிறார்கள்.
இந்த கொச்சுபம்பா வழியாகவே பொன்னம்பலமேட்டிற்கு செல்லலாம். ஆனால் இந்த பகுதி கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இங்கு அன்னியர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. மகர ஜோதியை மனிதர்களே ஏற்றுவதாக கேரள இந்து அறநிலையத் துறையும் ஒப்புக் கொண்டுள்ளது.
யாருமே போக முடியாத பொன்னம்பல மேட்டில் மனிதர்கள் எப்படி விளக்கேற்ற முடியும். எனவே இது ஐயப்பனின் சக்தி என பலர் நம்புகிறார்கள். எனவே மகர ஜோதியை யார் ஏற்றுகிறார்கள் என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.












Click it and Unblock the Notifications