ரஷ்ய அதிபர் தேர்தல்.. கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமாக வந்த மக்கள்
திருவனந்தபுரம்: ரஷ்யாவில் அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் தேர்தல் நடைபெறுவது ஏன் என்பதற்கான காரணங்களை பற்றி இங்கே காணலாம்.
ரஷ்யாவின் அடுத்த அதிபரை தேர்வு செய்ய அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை என மொத்தம் 3 நாட்கள் நடைபெறுகிறது. ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ரஷ்யாவில் அதிகாரமிக்க உச்ச பொறுப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் புதின், இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2030 வரை அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்.

கேரளாவில் ரஷ்ய அதிபர் தேர்தல்: புதினை எதிர்த்து அதிபர் தேர்தல் போட்டியில் மூன்று வேட்பாளர்கள் உள்ளனர். ரஷ்யாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் கேரளா மாநிலத்திலும் ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு இங்கு வாக்குப்பதிவு ஏன் என்பது பற்றி இங்கே பார்க்காலம்.
இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக நல்லுறவில் இருந்து வருகிறது. ரஷ்யா உதவியுடன் பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் திட்டத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு உள்ளது. இதனால், ரஷ்ய நாட்டவர்கள் பலரும் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள். அதுபோக சுற்றுலாவிற்காகவும் இந்தியாவுக்கு ரஷ்ய நாட்டு பயணிகள் அடிக்கடி வருகிறர்கள்.
ரஷ்ய தூதரக அதிகாரி விளக்கம்: இந்த நிலையில் தான், இந்தியாவில் வசிக்கும் ரஷ்ய மக்களும், ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்தியாவிலேயே வாக்களிக்கும் வசதியை சமீப காலமாக சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், தான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய இல்லத்தில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் கெளரவ தூதரகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஆர்வத்துடன் ரஷ்ய மக்கள் வந்திருந்தனர். இது தொடர்பாக ரஷ்ய இல்லத்தில் உள்ள கெளரவ தூதரக அதிகாரி ரதீஷ் நாயர் கூறியதாவது:- ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது இது மூன்றாவது முறையாகும். இந்தியாவில் வசிக்கும் ரஷ்ய குடிமக்களுக்கும் ரஷ்ய சுற்றுலாப்பயணிகளுக்கும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: ரஷ்ய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ரஷ்ய நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்கின்றனர்" என்றார். அதேபோல், வாக்களிக்க வந்த உலியா என்ற ரஷ்ய நாட்டவர் கூறுகையில், ' இங்கு வாக்களிக்க வந்து இருக்கும் அனைவருமே இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய ரஷ்ய மக்கள் அல்லது சுற்றுலாப்பயணிகள்தான்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் இந்தியாவில் இருந்து கொண்டே பங்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் வாக்களிப்பது எங்களின் கடமையாகும். எனவே ரஷ்ய இல்லத்திற்கும் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
பிரான்ஸ் தேர்தலில் புதுவையில் வாக்குப்பதிவு: ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெறுவது போல பிரான்ஸ் அதிபர் தேர்தலின் போது புதுவையிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு உலகம் முழுவதும் உள்ள வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வாக்களிப்பார்கள்.
புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் சுமார் 4 ஆயிரத்து 564 பேர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் போது புதுவையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வந்து வாக்களிப்பது உண்டு.












Click it and Unblock the Notifications