‛தி கேரளா ஸ்டோரி’படத்துக்கு தடை விதிக்க மறுத்த கேரளா உயர்நீதிமன்றம்.. காரணமே இதுதான்.. பரபர தகவல்
திருவனந்தபுரம்: ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தடை விதிக்க கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அதிரடியாக உத்தரவிட்டதோடு பல்வேறு விஷயங்களை அடுக்கியது.
கேரளாவை மையப்படுத்தி ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டில் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்பட்டு சதிவேலைகளில் ஈடுபடுவது போல் காட்டப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் படக்குழு திரைப்படத்தை திரையிடுவதில் உறுதியாக இருந்தது. திட்டமிட்டப்படி இன்று (மே 5) படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் தான் ‛ தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடைக்கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் இன்று கேரளா உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகரேஷ் மற்றும் சோபி தாமஸ் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது பட தயாரிப்பாளர் சார்பில், ‛‛32 ஆயிரம் கேரளா பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறியது தொடர்பான டீசர் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கம் செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திரைப்படத்தின் டிரெய்லரை நீதிபதிகள் பார்வையிட்டனர். அதன்பிறக நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ‛‛இந்த திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பில் மக்கள் பார்க்கலாம் என சான்று வழங்கி உள்ளது. மேலும் டிரெய்லரை பார்த்தபோது குறிப்பிட்ட சமூகத்தை பற்றி தவறான வகையில் எதுவும் இல்லை. அதோடு நிகழ்வுகள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என தயாரிப்பாளர் ட‛டிஸ்கிளைமர்' போட்டுள்ளார்'' என தெரிவித்தது.

மேலும் நீதிபதி நாகரேஷ் கூறுகையில், ‛‛இங்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு படைப்புகளை உருவாக்குவதற்கான கலை சுதந்திரம் உள்ளது. அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஏதேனும் உள்ளதா? மதம் சார்ந்த எந்த குற்றச்சாட்டும் இருக்கிறதா? மாறாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரானதாக படம் உள்ளது'' எனக்கூறினார்.
மேலும் வழக்கு விசாரணையின்போது வாய்மொழியாக நாகரேஷ் சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது இது ஒரு புனைவு கதையாகும். இங்கு பேய்கள், காட்டேரிகள் என ஒன்று இல்லை. இருப்பினும் அதனை சார்ந்த படங்கள் எடுக்கப்படுகின்றன. மேலும் பல திரைப்படங்களில் இந்து சன்னியாசிகளை கடத்தல்காரர்கள், ரேப்பிஸ்டுகளாக காட்டுகின்றனர். அப்போது யாரும் எதுவும் சொல்வது இல்லை. கேரளா என்பது மதசார்பற்ற மாநிலம். மேலும் ஒரு படத்தில் பூஜாரி ஒருவர் சிலை மீது எச்சில் துப்புவார். அப்போது பிரச்சனை ஏற்படவில்லை. மாறாக அந்த படம் விருது கூட வென்றது'' என கூறினார்.
இதுபோன்ற பல விஷயங்களை கூறிய கேரளா உயர்நீதிமன்றம் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து கேரளாவிலும் இன்று ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. இருப்பினும் கூட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications