எந்தப் பெண்ணும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழையவில்லை.. கலெக்டர் பேட்டி
Recommended Video
நிலக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இதுவரை எந்த பெண்ணும் நுழையவில்லை என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹு கூறியுள்ளார்.
முன்னதாக போராட்டக்காரர்களை தாண்டி 18 படிகளில் பெண் ஒருவர் ஏறியதாக கூறி தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இந்து அமைப்பினர் திரளாக கூடி பெண் பக்தர்களை சபரிமலை கோயிலுக்கு நெருங்க விடாமல் அட்டகாசம் செய்தனர். கற்களை வீசுதல், மிரட்டல் விடுத்தல் என அவர்கள் பல்வேறு கலவரங்களில் ஈடுபட்டு பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்ததால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. கலவரத்தை தடுக்க நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு சபரிமலை பாதுகாப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கலவரங்களை கேரள மாநில தொலைக்காட்சி நேரலை செய்து கொண்டிருந்த போது, பெண் ஒருவர் 18 படிகள் கடந்து சன்னிதானத்துக்கு செல்வது போன்ற காட்சி வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதை மறுத்துள்ளார் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹு. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நூஹு கூறுகையில், இதுவரை எந்தப் பெண்ணும் சன்னிதானத்திற்குள் நுழையவில்லை. அப்படி வந்த தகவல்கள் தவறு. பலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் யாரும் இதுவரை நுழையவில்லை என்றார் நூஹு.