நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்.. பாலக்காட்டில் போக்குவரத்து பாதிப்பு.. பின்னணியில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
கேரளா மாநிலம் பாலக்காடு தெற்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐஎம்ஏ ஜங்ஷன் உள்ளது. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வந்தார்.

சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்' செய்தார்.
நடுரோட்டில் அவர் ‛நமாஸ்' செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாலக்காடு தெற்கு போலீசார் உடனடியாக வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி தங்களுடன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சொத்து பிரச்சனையை தீர்க்க கோரி விநோதமான முறையில் போராட்டம் நடத்தியது தெரியவந்தது.
அதாவது அந்த பெண்ணுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து தகராறு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் பிரச்சனை தீர்த்து வைக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதற்காக தான் அவர் பிஸியான ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்துக்கு இடையூறாக நமாஸ் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பாலக்காடு தெற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மீட்கப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். இவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு நிலப்பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல சாலையில் நமாஸ் செய்துள்ளார்.
அந்த பெண்ணின் மனநிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அந்த பெண்ணின் சகோதரரை அழைத்து எச்சரிக்கை செய்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications