இடதுகை விரலில் காயம்! சுற்றி பேண்டேஜ்! 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த கேரள பெண்
திருவனந்தபுரம்: திருச்சூர் கூர்க்கெஞ்சேரியில் உள்ள சுவாமி போதானந்தா பள்ளி வாக்குச்சாவடியில், ஒரு விரலில் ஏற்பட்ட காயத்திற்காக வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட இளம்பெண், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு நேற்று ஒரே நாளில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கேரளாவில் 89 சதவீதம் வாக்குப் பதிவு நடந்தது. 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை காணலாம்.

கூர்க்கெஞ்சேரியைச் சேர்ந்த அக்ஷயா என்ற இளம்பெண்ணுக்கு, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மிக்ஸியை போட்ட போது அதில் தவறுதலாக அவரது இடது கை ஆள்காட்டி விரல் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு ஓடிய அந்த பெண்ணின் விரலில் 15 தையல்கள் போடப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்க விரல் கட்டுடன் அசைக்க முடியாத நிலையில் அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார்.
வாக்குப்பதிவு அதிகாரிகளோ, "இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க இடமில்லை, எனவே உங்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது" என்று கறாராக மறுத்துவிட்டனர்.
மருத்துவ அறிக்கைகளைக் காட்டியும் அதிகாரிகள் ஏற்கவில்லை. "கட்டை அவிழ்த்தால் மட்டுமே ஓட்டு போட விடுவோம்" என்று அவர்கள் பிடிவாதம் பிடித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதிகாரிகளின் இந்த விசித்திரமான முடிவை எதிர்த்து, அக்ஷயா தனது குழந்தையுடன் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டார்.
LDF வேட்பாளர் வி.எஸ். சுனில்குமார் நேரில் வந்து அக்ஷயாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
மற்றொரு விரலில் மை வைக்கலாம் என்ற கோரிக்கையையும் அதிகாரிகள் முதலில் நிராகரித்தனர். இது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கே எதிரானது எனப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.
மாவட்ட ஆட்சியர் வரை இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, ஒரு பிரமாணப் பத்திரம் (Affidavit) சமர்ப்பித்த பிறகு, அக்ஷயா வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
மதியம் 1:30 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த அவர், கடும் போராட்டத்திற்குப் பிறகு மாலை 6 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார். ஒரு தனிநபரின் ஓட்டு உரிமைக்காக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நுட்பமான தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது என்பதை அக்ஷயாவின் விடாமுயற்சி நிரூபித்துள்ளது!












Click it and Unblock the Notifications