திருநெல்வேலிக்கே அல்வா.. வெளிநாடு சுற்றுலா.. பரிசு கூப்பன்.. கொடைக்கானல் முழுக்க விபூதி அடித்த கும்பல்
கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ளவர்களிடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலாதளமான கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கிறார்கள். அந்த ஊர் மக்களிடமே வெளிநாடு சுற்றுலா ஆசை காட்டி விபூதி அடித்திருக்கிறது ஒரு வடமாநில கும்பல் . பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏமாற்றிக்கொண்டிருந்த கும்பல் எப்படி சிக்கியது என்பதை பார்ப்போம்,.

கோவை ஜானகி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவர் இவர் மார்ச் 9-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அப்போது பிரையண்ட் பூங்கா பகுதியில் டிப்-டாப் உடைகள் அணிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞரகள் சிலர் இவரிடம் அறிமுகமாகி உள்ளன்ர். அவர்கள் பரிசு கூப்பன்கள் மூலம் தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு ஆண்டுக்கு 7 நாட்களும், 10 ஆண்டுகளுக்கு 70 நாட்களும் சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள். அவரிடம் 2 கவர்களில் கூப்பன் வைத்து கொடுத்திருக்கிறார்கள் அதில் ஒரு கவரை பிரித்து பார்க்கும்படி அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்
உடனே ராஜ்குமார் கவரை பிரித்துபோது கூப்பனில் வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அச்சிடப்பட்டு இருந்தது. இதை உண்மை என நம்பிய ராஜ்குமார். அவர்கள் கூறிய இணையதள முகவரிக்கு 2 நபர்களுக்கு ரூ.3½ லட்சம் கட்டணமாக செலுத்தி உள்ளார்.
அதன்பின்னர் அவர்களின் செல்போன் எண்களுக்கு ராஜ்குமார் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த எண்கள் போலியானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதையும் அவர் அப்போதுதான் உணர்ந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் கொடைக்கானல் டிஎஸ்பி மதுமிதா தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், சேகர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கொடைக்கானல் முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் கொடைக்கானலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 7 பேர் கும்பல், இந்த மோடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள், அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த அணில் அஜய் மேக்லா (வயது 29), மும்பை தானே பகுதியை சேர்ந்த சுருதி (29), மும்பையை சேர்ந்த சாவாஜ் (30), அவரது தம்பி உசாமா (25), மும்பை பால்கர் பகுதியைச் சேர்ந்த சிவா (22), தெற்கு டெல்லியைச் சேர்ந்த ராகுல்சா (25), இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தீபிகா தத்தா (28) ஆகியோர் தான் என்பது தெரியவந்தது.
அவர்கள் கொடைக்கானலில் கடந்த 5 மாதங்களாக தங்கி இருந்து பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரு டேப்லேட், 7 செல்போன்கள், போலி அடையாள அட்டைகள், பரிசு கூப்பன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள்.
இதில் தீபிகா தத்தா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.30 லட்சம் வரை பண பரிமாற்றம் நடந்துள்ளது. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த மேலும் 3 பேர் புகார் அளித்திருக்கிறார்கள். அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொடைக்கானலில் வெளிநாடு சுற்றுலா என்ற பெயரில் பரிசு கூப்பனை வைத்து ஏமாற்றிய வடமாநில கும்பல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications