ஊட்டி ரேஷன் கடையில் தூங்கி கொண்டிருந்த சுற்றுலா பயணிகள்.. விருந்துக்கு வந்த யானை.. நடந்த ஆச்சரியம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தொரப்பள்ளி பகுதி, முதுமலை புலிகள் காப்பக எல்லையில் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் பயணிக்க முடியாது.. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் காலை 6 மணி வரை காத்திருப்பார்கள்.. அப்படி ரேஷன் கடை அருகே சுற்றுலாப் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ரேஷன் கடையை உடைத்து ரேஷன் அரிசியை தின்றது. ஆனால் ஆச்சர்யமான சம்பவம் அங்கு நடந்தது..
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி என்ற ஊர் இருக்கிறது. இது முதுமலை புலிகள் காப்பக எல்லையில் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இந்த சாலை மூடப்படுவது வழக்கம் ஆகும்.. இதனால் தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களில் மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து செல்வார்கள். சிலர் அங்குள்ள பகுதிகளில் படுத்து தூங்குவார்கள்..

மைசூர் சாலை
நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன்களில் மைசூரு செல்வதற்காக வந்துள்ளார்கள் ஆனால், இரவு 9 மணிக்கு மேல் ஆனதால் வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்தபடி படுத்து தூங்கியிருக்கிறார்கள். சிலர் பஜாரில் கடைகளுக்கு முன்பு தரையில் துணியை விரித்து படுத்து தூங்கினர்.
தொரப்பள்ளி பஜார்
இந்தநிலையில் நேற்று அதிகாலை தொரப்பள்ளி பஜாருக்குள் காட்டு யானை வந்துவிட்டது. அங்குள்ள ரேஷன் கடையை ஆவேசமாக உடைத்தது. பின்னர் உள்ளே இருந்த மூட்டையை வெளியே தூக்கி வைத்து, அரிசியை ருசித்து தின்றது. அப்போது ரேஷன் கடைக்கு மிக அருகில் தான் 2 வாலிபர்கள், காட்டு யானை நின்றது கூட தொியாமல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.
ரேஷன் அரிசி
காட்டு யானை அவர்களை கவனித்தாலும் ஒன்றும் செய்யாமல் ரேஷன் அரிசியை தின்று கொண்டிருந்தது. எனினும் காட்டு யானை அவர்களை கவனித்தபடி சில நிமிடங்கள் அசையாமல் நின்ற நிலையில், தூங்கியவர்களை ஒன்றும் செய்யாமல் தொடர்ந்து அரிசியை தின்று கொண்டிருந்தது.
வாலிபர்கள் தூங்கினர்
இதற்கிடையே காட்டு யானை ஊருக்குள் வந்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிந்த சிலர் சத்தம் எழுப்பியும், சாலையோரம் கிடந்த சிறிய கற்களை தூக்கி வீசியும் வாலிபர்களை எழுப்பினர். ஒருவர் எழுந்தார்.
தூக்க கலக்கத்தில் சுற்றுலா பயணிகள்
அப்போது தான் அவர்களுக்கு காட்டு யானை அருகே நிற்பது தெரிய வந்தது. அவர்கள் தூக்க கலக்கத்தில் இருந்தாலும், காட்டு யானையை கண்டு பதட்டம் அடையவில்லை. உடனே அங்கிருந்து நைசாக கிளம்பினார்கள். பின்னர் அந்த பகுதி மக்கள் பத்திரமாக அவர்களை மீட்டு அழைத்து சென்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காட்டு யானையை விரட்டினர்
பின்னர் காட்டு யானையை அந்த கிராமத்து பொதுமக்கள் தங்களது வழக்கமான பாணியில் விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினர் சேதமடைந்த ரேஷன் கடையை பார்வையிட்டார்கள். பொதுவாகவே காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் தன்மை உடையவை. ஆனால் குறிப்பிட்ட காட்டு யானை தனது அருகே படுத்து கிடந்த இளைஞர்களை எந்தவித இடையூறும் செய்யாமல் பொறுமையாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications