புத்தாண்டை புத்துணர்ச்சியாக கொண்டாட.. தென் இந்தியாவில் சூப்பரான இடங்கள்! உடனே டிக்கெட் போடுங்க
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ள நிலையில், இந்த புத்தாண்டை புத்துணர்ச்சியோடு கொண்டாட தென் இந்தியாவில் உள்ள அருமையான சில இடங்களை காணலாம்,
சென்னை: புத்தாண்டு என்றாலே பலரது நினைவுக்கு வருவது சென்னைதான். மெரினா கடற்கரை அருகே அமைந்து உள்ள காந்தி சிலை சதுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்பது உற்சாகமான உணர்வை பலருக்கு தரும். இந்த ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு மெரினா கடற்கரையில் ஏராளமான சென்னை வாசிகள் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

வெளியூர்களில் வசிப்பவர்களும் இந்த விடுமுறையை பயன்படுத்தி சென்னை வந்து மகிழ்ச்சியில் திளைக்கலாம். புத்தாண்டை முன்னிட்டு சென்னையின் மால்கள் தொடங்கி பிளாட்பார்ம் கடைகளில் வலம் வந்து சலுகை விலை ஷாப்பிங் செய்யலாம். சென்னை ஸ்பெஷல் பிரியாணி தொடங்கி அத்தோ வரை அனைத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.
புதுச்சேரி: சென்னையை சொல்லிவிட்டு பாண்டிச்சேரியை விட்டுவிட முடியுமா? புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை போன்றே புதுச்சேரி கடற்கரையிலும் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களைகட்டும். பிரெஞ்சு கட்டிடக் கலைகள், நகர அமைப்புகள், அழகியலுடன் கலந்த புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பல இடங்களில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். சென்னையில் புத்தாண்டை வரவேற்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே புதுச்சேரிக்கு வருபவர்களும் அதிகம்.
கொச்சி: அரபிக் கடலோரம் அமைந்து உள்ள கேரளத்தின் அழகிய நகரான கொச்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் புதிய அனுபவத்தை தரும். அந்த அளவுக்கு மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் தனித்துவமான முறையிலும் புதுவிதமாகவும் புத்தாண்டை கொண்டாடுகிறது கொச்சி. முன்னிட்டு கொச்சியில் நடைபெறும் பிரமாண்டமான கார்னிவல் நிகழ்ச்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இதனை கண்டுகளிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் கொச்சி வருகிறார்கள். அங்கு பீச் புட்பால், கலை நிகழ்ச்சி, புத்தாண்டு சிறப்பு போட்டிகள், பைக், சைக்கிள் பந்தயங்கள், உணவு திருவிழாக்கள், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் என சகல கொண்டாட்டங்களும் இடம்பெறும்.
வர்கலா: தென் இந்தியாவின் கோவா என்று அழைக்கப்படும் வர்கலா பல நாடுகளின் சுற்றுலா பயணிகள் சங்கமிக்கும் இடமாகும். அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், இதமூட்டும் கடற்கரைகளையும், ஏரிகளையும் கொண்ட வர்கலாவில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்புமிக்கதான இருக்கும். அங்குள்ள ஏஞ்செலோ கோட்டையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம்.
பெங்களூர்: இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பரபரப்பான பெங்களூரில் விடுமுறை கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பல நாள் விடுமுறைகளின்போது ஐடி ஊழியர்கள் மனதை அமைதிப்படுத்த கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அதுவும் புத்தாண்டின்போது இங்கு கொண்டாட்டங்கள் தெறிக்கும். பார்டி ஹால்கள், உணவகங்கள் முன்பதிவு செய்யப்பட்டு நிறைந்து காணப்படும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டை மகிழ்வோடு மக்கள் வரவேற்பது வழக்கம்.












Click it and Unblock the Notifications